கடந்த 2 வருடங்களில் 3.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசு அதிரடி அறிக்கை!
கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய மாதிரி சர்வே (The National Sample Survey Office's Periodic Labour Force Survey) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வேலைவாய்ப்பு பிரச்சனை நிகழ்வதாக அறிக்கையில் தகவல் வெளியாகி இருந்தது.
இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலை மத்திய அரசு மறுத்து இருந்தது. மத்திய பாஜக அரசு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது, அதுகுறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறியது.
வேலைவாய்ப்பு
இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிக்கை உள்ளது. அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையில், கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2017-2018ம் வருடம் மட்டும் 251,279 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.
எங்கு உருவாக்கும்
இந்த நிலையில் மொத்தமாக இரண்டு வருடத்தில் 379,544 வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. வரும் மார்ச் 1ம் தேதியோடு இது 36,15,770 ஆக அதிகரிக்கும் என்றுள்ளது. முக்கியமாக ரயில்வே துறையில்தான் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் போலீஸ் மற்றும் வருமான வரித்துறையில் அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எங்கு
2019 மார்ச்சில் ரயில்வேத்துறையில் புதிதாக 98,999 வேலைகள் ஏற்படும். அதேபோல் இந்த வருடம் 79,353 வேலைகள் புதிதாக போலீஸ் துறையில் உருவாக்கப்படும். இரண்டில் இருந்துதான் இந்த வருடம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இன்னும் சில
வருமான வரித்துறையில் 80,143 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். போலீஸ் துறை மற்றும் ரயில்வேத்துறை இல்லாமல் இந்த துறையில்தான் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. வேலைவாய்ப்பு இதில் இந்த வருட இறுதியில் 92,842 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
வேறு என்ன
அதேபோல் விமானத்துறையில் 2,363 வேலைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடம் இது இன்னும் அதிகரிக்கும். மொத்தமாக அனைத்து விமான நிலையங்களையும் சேர்த்து 1 லட்சம் பேர் வரை புதிதாக வேலைக்கு எடுக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது என்பதற்கு பதிலடியாக இந்த அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது.