அந்த கொடுமையை இந்தியாவே கண்கொண்டு பார்த்தது.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா பாய்ச்சல்!
ஜேஎன்யூவில் மாணவர்கள் தாக்கப்பட்ட கொடுமையை இந்தியாவே கண்கொண்டு பார்த்தது, அது தனக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜேஎன்யூவில் மாணவர்கள் தாக்கப்பட்ட கொடுமையை இந்தியாவே கண்கொண்டு பார்த்தது, அது தனக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. மொத்தம் 20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ளவில்லை.
குடியுரிமை சட்ட திருத்தம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நாடு முழுக்க நடக்கும் போராட்டம் ஆகியவை குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது. சுமார் 1.30 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வெளிநாட்டு அழுத்தம்.. உள்ளுக்குள்ளேயே வெடித்த பெரும் மக்கள் புரட்சி.. கவிழும் நிலையில் ஈரான் அரசு!
என்ன சொன்னார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, இந்த நாடு தற்போது கலவரங்களை கண் முன்னே பார்த்து வருகிறது. பாஜகவின் ஆதரவோடு ஜேஎன்யூவில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அந்த கொடுமையை இந்தியாவே நேரடியாக கண்கொண்டு பார்த்தது. அதன்பின் ஜாமியா மிலியா, பிஎச்யூ உள்ளிட்ட பல கல்லூரிகளில் கலவரம் நடந்தது.
அரசு வெறுப்பு
மக்கள் மத்தியில் அரசு வெறுப்பை விதைத்து வருகிறது. மக்களை பிரிக்க பாஜக முயன்று வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாஜக மொத்தமாக உடைக்க பார்க்கிறது. அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாஜக இதை எல்லாம் செய்து வருகிறது.
ஆட்சி தெரியவில்லை
தங்களுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை என்பதை அமித் ஷாவும், மோடியும் நிரூபித்துவிட்டனர். அதனால் கலவரங்களை தூண்டி விடுகிறார்கள். என்ஆர்சி குறித்து அவர்கள் சொன்ன கருத்தை அவர்களே மாற்றி கூறி வருகிறார்கள். மாற்றி மாற்றி பேசி மக்களை குழப்பி வருகிறார்கள்.
பொருளாதாரம்
இந்தியாவில் தற்போது மிக மோசமான பொருளாதார பிரச்சனை நிலவி வருகிறது. நாளுக்கு நாள் பொருளாதாரம் சரிந்து வருகிறது. இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் குழம்பி வருகிறார்கள். அதை மறைக்கும் பொருட்டு, பாஜக இதை எல்லாம் செய்து வருகிறது, என்று சோனியா காந்தி பேசி உள்ளார்.