வெறுப்பு பேச்சு.. எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை.. நடுநிலையுடன்தான் செயல்படுகிறோம்.. பேஸ்புக் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் பேஸ்புக் நிறுவனம் எப்போதும் ஒரு தலைபட்சமாக செயல்பட்டது கிடையாது, வெறுப்பு பேச்சுக்கு எதிராக நேர்மையாக, நடுநிலையுடன் செயல்பட்டு இருக்கிறோம் என்று பேஸ்புக் இந்திய பிரிவின் துணை தலைவர் அஜித் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
பேஸ்புக் தொடர்பாக அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதிய கட்டுரைதான், இந்த சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டது. வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை. பாஜகவினருக்கு ஆதரவாக பேஸ்புக் செயல்பட்டது.
வன்முறைகளை தூண்டும் வகையில் பாஜகவினர் மூலம் போடப்படும் பேஸ்புக் போஸ்டுகளுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த புகார்கள் தற்போது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக தொடர் கேள்விகளை எழுப்பி வருகிறது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை : நேரலையில் தரிசிக்கலாம்
என்ன விளக்கம்
இது தொடர்பாக பேஸ்புக் இந்தியாவின் துணை தலைவர் அஜித் மோகன் விளக்கம் அளித்துள்ளார். அதில், பேஸ்புக் எப்போதும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது கிடையாது, இங்கு யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் உள்ளது. பேஸ்புக் எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக எங்களுக்கு எதிராக புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.
என்ன புகார்
எங்கள் கொள்கையை, முடிவுகளை எடுப்பதில் பாரபட்சம் நிலவுவதாக புகார் வந்துள்ளது. இது போன்ற புகார்களை நாங்கள் தீவிரமாக கருத்தில் கொள்கிறோம். நாங்கள் வெறுப்பு பேச்சு, வன்முறையை தூண்டும் பேச்சுகளுக்கு எதிராக கண்டிப்பாக செயல்படுவோம் என்பதை இங்கு உறுதியாக கூறுகிறோம். நாங்கள் யாருக்கும் சாதகமாக செயல்பட்டது கிடையாது.
உடனே எதிர்ப்பு
வெறுப்பு பேச்சுக்கள் எந்த விதத்தில் இருந்தாலும் யாரிடம் இருந்து வந்தாலும் உடனே அதில் நடவடிக்கை எடுப்போம். உலகம் முழுக்க ஒரே மாதிரியான விதிகளை மட்டுமே நாங்கள் பின்பற்றுகிறோம். அரசியல் ரீதியான சார்புகள் இன்றிதான் முடிவுகளை எடுத்து வருகிறோம். இந்தியாவில் அதேபோல்தான் உறுதியான முடிவுகளை எடுத்து, நேர்மையாக செயல்பட்டு வருகிறோம், என்று அஜித் மோகன் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ் அனுப்பியது
முன்னதாக பேஸ்புக் இந்தியா நிறுவனத்திற்கு பாராளுமன்ற நிலைக்குழு சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையில் இந்த விசாரணை நடக்க உள்ளது. செப்டம்பர் 2ம் தேதி பேஸ்புக் நிர்வாகிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணை நடக்க உள்ள நிலையில் தற்போது பேஸ்புக் துணை தலைவர், தனது விளக்கத்தை அளித்துள்ளார் .