சமஸ்கிருதத்தை தமிழர்கள் நேசிக்கிறார்கள்.. அது சிறப்பான மொழி.. எம்பி ஓபிஆர் பேச்சு.. பெரும் சர்ச்சை!
சமஸ்கிருதம் மொழியை தமிழக மக்கள் நேசிக்கிறார்கள், அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று லோக்சபாவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
டெல்லி: சமஸ்கிருதம் மொழியை தமிழக மக்கள் நேசிக்கிறார்கள், அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று லோக்சபாவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக லோக்சபாவில் சமஸ்கிருத பல்கலைக்கழகம் தொடர்பான விவாதங்கள் உச்சம் அடைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 3 சமஸ்கிருத தனியார் பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் பல்கலைக்கழகங்ளாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் பல கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
எதிர்ப்பு
இந்த மசோதாவிற்கு எதிராக திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி, மதுரை கம்யூனிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் ஆகியோர் மிக மிக கடுமையாக பேசினார்கள். தமிழ் எப்படி சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி,எதனால் தமிழ் சிறந்த மொழி. சமஸ்கிருதத்தை மத்திய அரசு ஆதரிப்பதற்கு பின் இருக்கும் அரசியல் என்ன என்பது குறித்து எல்லாம் இதில் இவர்கள் பேசினார்கள்.
அதிமுக ஆதரவு
இந்த நிலையில் இந்த மசோதாவை தமிழகத்தில் இருந்து தனி ஆளாக ஆதரித்து பேசினார் தேனி அதிமுக எம்பி ரவீந்திர நாத். சமஸ்கிருத மொழியை புகழ்ந்து பேசிய ரவீந்திரநாத் தனது பேச்சில், தமிழ் மொழியை போலவே சமஸ்கிருதம் பழமையானது. பல துறைகளில் சமஸ்கிருதம் மொழியில் புத்தகங்கள் உள்ளது. இலக்கியம், இலக்கணம், சமூகம், மருத்துவமும், வானியல் ஆகிய துறைகளில் சமஸ்கிருதம் வளர்ந்து இருந்தது.
ஆனால் என்ன
ஆனால் சமஸ்கிருதம் மொழியில் ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. பலர் இந்த மொழியை கவனிக்கவில்லை. அதனால் இனிமேலாவது மக்கள் இந்த மொழி மீது கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசு சமஸ்கிருதம் மீதும் அதன் ஆராய்ச்சிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த மசோதா
இந்த மசோதா அதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். வேறுபாடு இன்றி அனைத்து மக்களுக்கு இந்த மொழி கற்றுத்தரப்படும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரம் மக்கள் சமஸ்கிருதம் மொழியை கற்று அதில் ஆராய்ச்சி செய்வார்கள். இதை நான் பெரிதாக வரவேற்கிறேன்.
தமிழ் பிடிக்கும்
தமிழக மக்களாகிய நாங்கள் தமிழை விரும்புகிறோம். அதேபோல் சமஸ்கிருதம் மொழியை மதிக்கிறோம். அதை நேசிக்கிறோம். அதேபோல் மற்ற மக்களும் தமிழை நேசிக்க வேண்டும் என்று ரவீந்திர நாத் பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு லோக்சபாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.