உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை… விரைவில் மேல்முறையீடு.. ஸ்டெர்லைட் சிஇஓ பேட்டி
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் இன்னும் கைகளுக்கு கிடைக்கவில்லை என்றும் நீதிமன்றம் கூறியபடி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்வோம் என்று ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22ம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாயினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த சிறப்பு உத்தரவின்பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இந் நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
அதிகாரமே கிடையாது.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தை விளாசிய சுப்ரீம் கோர்ட்.. ஸ்டெர்லைட் தீர்ப்பின் விவரம்
ராம்நாத் பேட்டி
இந்த உத்தரவு குறித்து ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்திருக்கிறது. எங்களின் கைகளுக்கு அந்த உத்தரவு இன்னும் வரவில்லை.
மேல்முறையீடு செய்வோம்
உச்ச நீதிமன்றம் கூறியவாறு... உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்வோம். நீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இருக்கு என்று தான் வாதடினோம். இந்த வழக்கில் ஸ்டெர்லைட்டின் மெரிட் பற்றி நீதிமன்றம் பேசவில்லை.
பராமரிப்பு, இழப்பு
ஆலையின் சுற்றுச்சூழல் குறித்தும் பேசவில்லை. கடந்த 7,8 மாதங்களாக ஆலை மூடப்பட்டுள்ளதால் பராமரிப்பு என்பது தான் தற்போது முக்கியமாக பார்க்கிறோம். ஆலை மூடப்பட்டிருப்பதால் கடுமையான இழப்பு எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
ரூ100 கோடி மதிப்புள்ள திட்டங்கள் தொடரும்
கடந்த 6,7 மாதங்களாக எங்களை ஆலைக்குள் அனுமதிக்கவில்லை. ஆகையால்.. தற்போது ஆலை உள்ளே எப்படி இருக்கிறது என்பது தெரியாது. உச்ச நீதிமன்றம் கூறியதை பின்பற்றுவோம். அதே நேரத்தில் தூத்துக்குடியில் நாங்கள் தொடங்கி உள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் தொடரும் என்று கூறினார்.