நம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்!!
டெல்லி: தங்களது குறைகளை நிவர்த்தி செய்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனது நம்பிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன். ராஜஸ்தான் மக்களுக்கு செய்து கொடுத்த கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த காங்கிரஸ் உள்கட்சி பூசல் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இருவருக்கும் இடையே எழுந்த மோதலால், கடந்த மாதம் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். பாஜக தூண்டுதலில் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர் என்று காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், பாஜகவில் இணைய மாட்டேன் என்று சச்சின் பைலட் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரையும் சச்சின் பைலட் சந்தித்துப் பேசினார். அப்போது தனது சார்பில் மூன்று கோரிக்கைகளை வைத்தார்.
- எதிர்கால முதல்வர் சச்சின் பைலட் என்று அதிகாரபூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
- இல்லையென்றால், தனது ஆதரவாளர்களில் மூத்த தலைவர்களில் இருவரை துணை முதல்வர்களாக்க வேண்டும். மற்றவர்களுக்கு அமைச்சர் பதவி, போர்டு டிரஸ்ட் பொறுப்பு, கார்பரேஷனில் பொறுப்பு வழங்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் பொதுச் செயலாளராக சச்சினுக்கு பதவி வழங்க வேண்டும்.
- இந்த அறிவிப்புகளை காங்கிரஸ் அறிக்கையில் ராகுல் காந்தி அறிவிக்க வேண்டும் என்று மூன்று கோரிக்கைகளை வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவற்றில் சிறப்பு குழுவை அமைக்க காங்கிரஸ் மேலிடம் ஒப்புக்கொண்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்த சிறப்புக் கமிட்டியில் பிரியங்கா காந்தி, அஹ்மத் பட்டேல், கேசி வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
நான் எழுப்பிய கலகக் குரல் சுயமரியாதைக்கானது.. கட்சி பதவிக்காக அல்ல.. அடேங்கப்பா சச்சின் பைலட்
இந்த நிலையில் இன்று அதிகாலை தனது டிவிட்டரில் காங்கிரஸ் தலைமைக்கு நன்றி தெரிவித்து இருந்த சச்சின் பைலட், ''சிறந்த இந்தியாவை உருவாக்கவும், ராஜஸ்தான் மக்களுக்கு அளித்திருந்த வாக்குகளை நிறைவேற்றவும், ஜனநாயக மதிப்பை தூக்கிப்பிடிக்கவும் பாடுபடுவேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு பின்னர் பத்திரிக்கையாளர் முன்பு தோன்றி இருந்த சச்சின், ''காங்கிரஸ் தலைமையிடம் எங்களது அனைத்து பிரச்சனைகளையும் வைத்து இருக்கிறோம், அமைப்பு ரீதியாக இருக்கும் குறைகளையும் முன் வைத்துள்ளோம். எங்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இவையெல்லாம் களையப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.
இன்று மாலை சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் 4 மணிக்கு ஜெய்பூர் வர இருக்கும் தகவலும் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இன்று இவர்களை வரவேற்று ட்வீட் வெளியிட்டு இருக்கும் முதல்வர் அசோக் கெலாட், ''எங்களது கட்சியில் அமைதி, சகோதரத்துவம் தழைத்தோங்கும். குறைகளை நிவர்த்தி செய்ய மூன்று நபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.