தீவிரவாதத்திற்கு எதிராக செயலாற்றுவோம்.. இந்தியாவிற்கு கை கொடுக்கும் சவுதி.. சல்மான் அதிரடி!
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் சவுதி அரேபியா துணையாக இருக்கும் என்று சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
டெல்லி: தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் சவுதி அரேபியா துணையாக இருக்கும் என்று சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் மோடியை சந்தித்த அவர் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மா முன்னிலையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த ஒப்பந்தங்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மோடி பேச்சு
இதையடுத்து பிரதமர் மோடி தனது பேச்சில், இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் நன்மைகள் குறித்து நாங்கள் இதில் பேசினோம். இருநாட்டு உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இந்த சந்திப்பு உதவும். இரண்டு நாடுகளும் பல வருடங்களாக நட்பு நாடுகளாக இருந்துள்ளது.
விவாதம்
தீவிரவாதத்திற்கு உதவும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டு இருக்கிறோம். இதுகுறித்து நாங்கள் இருவரும் விவாதம் செய்தோம். தீவிரவாத வளர்ச்சி நாடுகளை தனிமைப்படுத்த உலக நாடுகள் கை கொடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.
பாகிஸ்தான்
நமது பிராந்தியத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சவுதி - இந்தியா சேர்ந்து நடவடிக்கை எடுக்கும். தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, தாக்குதல், சைபர் பாதுகாப்பு, உளவுத்துறை தகவல்கள் அனைத்திலும் இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து செயல்பட உறுதி கொண்டு இருக்கிறோம். பயங்கரவாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை புல்வாமா தாக்குதல் உலகிற்கு காட்டியுள்ளது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
சல்மான் பதில்
இதையடுத்து பேசிய சல்மான், தீவிரவாதமும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை. தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கையில் அனைத்து உதவிகளையும் சவுதி இந்தியாவிற்கு செய்யும் என்று உறுதி அளிக்கிறேன். இந்தியாவிற்கு மட்டுமில்ல அனைத்து அண்டை நாட்டிற்கும் சவுதி இப்படி உதவும். இதில் இந்தியாவின் செயல்பாட்டை பாராட்டுகிறோம், என்று சல்மான் கூறியுள்ளார்.