விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு.. பாஜக கூட்டணியில் பிளவா? விரைவில் முடிவு எடுக்கிறது ஷிரோமணி அகாலி தளம்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதா, கூடாதா என்று விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ஷிரோமணி அகாலி தளம் கட்சி அறிவித்துள்ளது.
டெல்லி: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதா, கூடாதா என்று விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ஷிரோமணி அகாலி தளம் கட்சி அறிவித்துள்ளது.
ஷிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாவை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறி ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜினாமா செய்துள்ளார்.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த ஒரே ஷிரோமணி அகாலி தளம் அமைச்சரும் இதன் மூலம் ராஜினாமா செய்துள்ளார். இவர் மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்தார்.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் நீடிப்பதா, கூடாதா என்று விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ஷிரோமணி அகாலி தளம் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மற்றும் ஹர்சிம்ரத் கெளர் பாதலின் கணவர் சுக்பீர் சிங் பாதல் பேட்டி அளித்துள்ளார்.
லோக்சபாவில் நிறைவேறிய 3 விவசாய மசோதாக்கள்.. கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்.. சர்ச்சைக்கு காரணம் என்ன?
அதில், பாஜக கூட்டணியில் இருக்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்து வருகிறோம். விவசாயிகள் நலனே எங்களுக்கு முக்கியம். அதற்காக எதையும் இழக்க தயார். பாஜகவின் விவசாய விரோத போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜக கூட்டணியில் பல காலமாக இருக்கிறோம்.
ஆனால் இனியும் பாஜகவின் இது போன்ற சட்டங்களை ஆதரிக்க முடியாது. விவசாயிகளால்தான் நாங்கள் இந்த இடத்திற்கே வந்து இருக்கிறோம். விவசாயிகளை பற்றி பேசாமல் ஒரு சட்டம் வருவதை எங்களால் ஏற்க முடியாது. பஞ்சாப்பில் விவசாயத்தை இவர்கள் அழிக்க போகிறார்கள்.
விவசாயத்திற்கு எதிரான மசோதா.. மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் ராஜினாமா.. ஷிரோமணி அகாலி தளம் அறிவிப்பு!
பஞ்சாப், ஹரியானா விவசாயிகளுக்கு நாங்கள் உடன் இருப்போம். கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. வரும் நாட்களில் அதை பற்றி பேசுவோம் என்று அறிவித்து இருக்கிறார். இதனால் பாஜக கூட்டணியில் எஸ்ஏடி இருக்குமா என்று வரும் நாட்களில் தெரிந்து விடும் என்கிறார்கள்.
பாஜக - எஸ்ஏடி மோதலுக்கு மொத்தம் மூன்று சட்ட மசோதாக்கள் காரணம் ஆகும். மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020 ஆகிய மசோதாக்களை எஸ்ஏடி கட்சி எதிர்த்து இந்த முடிவை எடுத்துள்ளது.