அங்குலம் அங்குலமாக தேடுவோம்.. சட்டவிரோதமாக யாராவது இருந்தால் நாடு கடத்துவோம்.. அமித் ஷா அறிவிப்பு
டெல்லி: இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் வாழும் சட்டவிரோத குடியேறிகளையும், ஊடுருவல்காரர்களையும் அரசு அடையாளம் கண்டு நாடுகடத்தும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இறுதிப் பட்டியலை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் நேற்றிரவு அவசரமாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை அணுகிய மத்திய அரசும், அசாம் அரசும், எல்லைப் பகுதிகளில் வெளிநாட்டவர் ஊடுருவல் அதிக அளவில் இருப்பதால் டிராப்ட் சரிபார்ப்பு பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவை என கோரின.
இந்த நிலையில், மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "சரியான குடிமக்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம். எனவே ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் கேட்டுள்ளோம். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் ஊடுருவியவர்கள் அனைவரையும் நாங்கள் அடையாளம் கண்டு சர்வதேச சட்டத்தின்படி நாடு கடத்துவோம், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இதை குறிப்பிட்டிருந்தோம்" என்றார்.
உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ராஜ்யசபாவில் கூறுகையில் "சட்ட விரோத குடியேறிகள் என்று சில பெயர்கள் தேசிய குடியுரிமை பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சில பெயர்கள் தவறாக சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, எங்களுக்கு 25 லட்சம் கோரிக்கைகள் வந்துள்ளன. இறுதி என்.ஆர்.சி பட்டியலில் எந்த பிழையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்" என்றார்.