வணக்கம் நல்லா இருக்கீங்களா?.. தூத்துக்குடி பொன் மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி
டெல்லி: மனதின் குரல் என அழைக்கப்படும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார் அப்போது அவர் பேசும் போது, தமிழகத்தைச் சேர்ந்த பொன் மாரியப்பனின் செயலை பெருமிதத்துடன் கூறி நினைவு கூர்ந்தார்
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வாரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுவார். அதன்படி இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும் போது, "தசரா என்பது நெருக்கடியின் போது பொறுமையை கடைபிடித்து பெற்ற வெற்றியின் பண்டிகை. எனவே நாம் பண்டிகையை அமைதியாக கொண்டாட வேண்டும். அப்படி நாம் செயல்பட்டால் கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி நிச்சயம்.
இந்த பண்டிகையில் நமது ராணுவ வீரர்களுக்காக விளக்கு ஏற்ற வேண்டும்.. பிரதமர் மோடி
யாருக்கு முக்கியத்துவம்
இந்த பண்டிகையின் போது பொருள் வாங்க நம்முடைய உள்ளூர் கடைக்காரர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுங்கள். முன்பெல்லாம், துர்கா பூஜை, தசரா பண்டிகையில் ஏராளமான மக்கள் கூடிவந்தனர் . ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை. இன்னும் பல திருவிழாக்கள் வரப்போகிறது.
தூய்மை பணியாளர்கள்
இந்த கொரோனா நெருக்கடியின் போது நாம் நிதானத்துடன் செயல்பட வேண்டும்:. பண்டிகைகளின் போது, கொரோனா போரில் நமக்காக பணியாற்றுபவர்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்திருக்கும். கடினமான காலங்களில் அவர்கள் நம்முடன் இருந்திருக்கிறார்கள் எனவே துப்புரவு பணியார்கள், போலீசார், சுகாதார பணியார்களை பண்டிகையின் போது அழைத்துச் செல்ல வேண்டும்.
மோடி பெருமிதம்
இப்போதெல்லாம், நம்முடைய பாரம்பரிய விளையாட்டு மல்லகாம்ப் பல நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. அமெரிக்காவில், சின்மே & பிரக்யா படங்கர் வீட்டில் மல்லகாம்பை கற்பிக்கத் தொடங்கியபோது, அது இவ்வளவு வெற்றியைப் பெறும் என்று அவர்களுக்குத் தெரியாது. இன்று, அமெரிக்காவில் பல மல்லகாம்ப் பயிற்சி மையங்கள் உள்ளன இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தற்காப்புக் கலைகள் இந்தியாவின் பாரம்பரியம். நமது பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படும்போது, உலகம் அதைக் கவனத்தில் கொள்கிறது
மோடி தமிழில் பேச்சு
தமிழகத்தின் பொன் மாரியப்பன் குறித்து இப்போது நாம் அறிந்து கொள்வோம். தமிழகத்தைச் சேர்ந்த பொன் மாரியப்பன் சலூன் கடையில் சிறப்பான வேலை செய்துள்ளார் அவர் சலூன் கடையின் ஒரு பகுதியை நூலகம் ஆக்கி உள்ளார்" என்றார். தூத்துக்குடியில் முடிதிருத்தும் நிலையம் நடத்தும் பொன் மாரியப்பனிடமும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வணக்கம் நல்லா இருக்கீங்களா என்று கேட்டார்.