தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில்.. சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.. கட்கரி
டெல்லி: தேசிய நெடுஞ்சாலை பணிகளில் சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் புகைச்சல் முற்றி இருக்கும் நிலையில், நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் அவர் அளித்திருக்கும் பேட்டியில், ''சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்யாத வகையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறோம்'' என்றார்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. குறிப்பாக டிக் டாக், ஹலோ ஆகிய செயலிகளை உடனடியாக கூகுள் குரோமில் இருந்தும், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் மத்திய அரசு நீக்கியது. இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை இந்தியர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ''இந்திய நெடுஞ்சாலை பணிகளில் சீன நிறுவனங்களை நேரடியாகவோ அல்லது கூட்டு சேர்ந்தோ ஈடுபட அனுமதிக்க மாட்டோம். விரைவில் சீன நிறுவனங்கள் இந்திய நெடுஞ்சாலைப் பணிகளில் ஈடுபட முடியாத அளவிற்கு சிறப்பு விதிமுறைகளை வெளியிட இருக்கிறோம்.
புதிய விதிமுறைகள் தற்போதைய மற்றும் எதிர்கால டெண்டர்களில் அமல்படுத்தப்படும். முன்பு விடப்பட்ட டெண்டர்களுக்கு இது பொருந்தாது. தற்போது விடப்பட்டு இருக்கும் டெண்டர்களில் சீன நிறுவனங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் மீண்டும் டெண்டர் விடப்படும்.
புயலை பார்க்க புல் மேக்கப்பில் போன உங்களை மாதிரியா? ரஜினியை சீண்டிய கஸ்தூரிக்கு நெட்டிசன்ஸ் நோஸ் கட்
நம் நாட்டு நிறுவனங்கள் டெண்டர்களை எடுக்கும் வகையில் விதிமுறைகளை எளிதாக்குமாறு நெடுஞ்சாலைத்துறை செயலாளர் கிரிதர் அறமன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை தலைவர் எஸ். எஸ். சந்துவை கேட்டுக் கொண்டுள்ளேன். தொழில்நுட்ப ரீதியிலான தளர்வுகள், நிதி தொடர்பான தளர்வுகளை மேற்கொள்ள கூட்டத்தை கூட்டி ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். அப்போதுதான் நம் நாட்டு நிறுவனங்கள் தொழிலில் ஈடுபட தகுதி வாய்ந்தவையாக இருக்கும்.
சிறிய காண்ட்ராக்டர் ஒருவர் சிறிய ஒப்புதலில் ஈடுபட்டு இருந்தால், அவரே பெரிய டெண்டர்களில் ஈடுபடுவதற்கு தகுதி பெறுகிறார். தற்போது இருக்கும் விதிமுறைகள் முறையானதாக இல்லை. எனவே அவற்றை மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இதன் மூலம் இந்திய நிறுவனங்களை நாம் ஊக்குவிக்க முடியும்.
ஒருவேளை தொழில்நுட்பம், டிசைன் ஆகியவற்றில் இந்தியா வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தாலும், சீன நிறுவனங்களுடன் இணைய மாட்டோம். வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்படும் என்றபோதும், சீன முதலீடு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வது குறைக்கப்படும். சீனப் பொருட்களுக்கு ஆர்டர் செய்து இருக்கும் இந்திய நிறுவனங்கள் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் பொருட்கள் கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் ஆர்டர் செய்து துறைமுகங்களில் நீண்ட நாட்கள் சிக்கி இருக்கும் பொருட்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் இருவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளேன்'' என்றார்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே லடாக்கின் வடக்குப் பகுதியில் வரையறுக்கப்படாத எல்லைப் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதையடுத்து சீனா மீது கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.