Awantipora attack: மறக்கவும் மாட்டோம்… மன்னிக்கவும் மாட்டோம்.. பழி வாங்குவோம்… சூளுரைத்த சிஆர்பிஎப்
டெல்லி:காஷ்மீர் தாக்குதலை மறக்கவும் முடியாது.. மன்னிக்கவும் முடியாது என்ற மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
ஜம்முகாஷ்மீர் மாநிலம் புல்வாமா சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் தற்கொலைப்படை நடத்திய தீவிரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டதாக கூறினார்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். இந்நிலையில், தாக்குதல் குறித்து முதன்முறையாக மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையான சிஆர்பிஎப் கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:புல்வாமா தாக்குதலை ஒரு போதும் மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது. இந்த தாக்குதலில் உயிரிழந்த சகோதரர்களுக்கு வீர வணக்கம்.
அவர்களது குடும்பங்களுக்கு நாங்கள் நிச்சயமாக துணை நிற்போம். ஈவு இரக்கமற்ற இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.