ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தை டெல்லியில் அமல்படுத்த மாட்டோம்.. ஆம் ஆத்மி பிடிவாதம்
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் அமல்படுத்தப்படாது என, ஆம் ஆத்மி அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மோடி தலைமையிலான அரசு, ஆயுஷ்மான் பாரத் இலவச திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா போன்ற திட்டங்களை அமல்படுத்தியது. இத்திட்டங்களின்படி நாட்டிலுள்ள மக்களில் சுமார் 10 கோடி பேரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே இலக்காகும்.
ஆனால் மோடி அரசின் இத்திட்டத்தில் இணைய ஒடிசா, டெல்லி, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மறுத்துவிட்டன. இந்நிலையில் இந்த திட்டத்தில் விரைவில் இணையுமாறு, மத்திய சுகாதார துறை அமைச்சரான ஹர்ஷ்வர்த்தன் மேற்கண்ட மாநிலங்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக 4 மாநிலங்களுக்கும் அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
ஆனால் மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், டெல்லி இணையாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
ஆனால் அந்த மாநிலங்களில் இருந்தெல்லாம் நோயாளிகள் டெல்லிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதற்கு என்ன அர்த்தம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் அவர்களுக்கு பிடிக்கவில்லை அல்லது உதவவில்லை என்று தானே கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். எனவே மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
டெல்லியை பற்றி மத்திய அரசு கவலைப்பட தேவையில்லை. எங்கள் மாநில மக்களை நாங்கள் கவனமாக பார்த்து கொள்வோம் என்றார். மேலும் பேசிய அவர், சமுதாய சாதிக்கணக்கெடுப்பில் இடம்பிடிக்கும் மக்களுக்கு மட்டுமே மத்திய அரசின் இலவச காப்பீடு வழங்கப்படுகிறது.
மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே இலவச சிகிச்சை அளித்து மற்றவர்களிடம் பணம் பறிப்பதில் ஆம் ஆத்மி அரசுக்கு உடன்பாடில்லை. எனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை காட்டிலும் சிறப்பான திட்டத்தை, டெல்லி அரசு மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மாநில சுகாதார துறை அமைச்சர் பேச்சுக்கு, டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மிகவும் சிறப்பான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, வேண்டுமென்றே ஆம் ஆத்மி குறை கூறுவதாக சாடினார். கெஜ்ரிவால் அரசை மக்கள் விரோத அரசு என உணர்ந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். ஆம் ஆத்மி அரசுக்கு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.