மிரட்டப்போகும் கோடை வெயில்: தமிழகம்,ராஜஸ்தானில் வெப்ப இரவுகள் அதிகரிக்கும் - இந்திய வானிலை மையம்
இந்த ஆண்டு இந்தியாவில் கோடை வெயில் மிரட்டப்போகிறது என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் வெப்பநிலை குறைவாக இருக்கும் என கணித்துள்ளது.
டெல்லி: வடகிழக்குப் பருவமழை பிப்ரவரி வரை நீடித்தாலும் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் துவக்கத்திலேயே ஆரம்பித்து விட்டது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில் வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு மற்றும் நாட்டின் கிழக்கில் உள்ள சில பகுதிகளில் அதிக வெப்பநிலை இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
நடப்பாண்டு அக்டோபர் தொடங்கி பிப்ரவரி நாட்டின் பல பகுதிகளிலும் பருவமழை கொட்டித்தீர்த்தது. நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதே கோடை காலம் ஆரம்பித்து விட்டது. இந்த ஆண்டு கோடை காலம் எப்படி இருக்கும் என்று இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பலரையும் அச்சமடைய வைத்துள்ளது.
நடப்பாண்டு கோடையில் வழக்கத்துக்கு மாறாக வட மாநிலங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ஒப்பீட்டளவில் தென்னிந்திய மாநிலங்களில் வெப்பநிலை குறைவாக இருக்கும் என கூறியுள்ளது.
பசிபிக் கடலில் லா -நினா
பசிபிக் கடற்பகுதியில் மிதமான லா-நினா தாக்கம் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது சற்றே தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளது. லா-நினா நிகழ்வின்போது, மேற்பரப்பிலுள்ள கடல்நீரின் சராசரி வெப்பநிலை குறைவாக இருக்கும்.
எப்போது ஏற்படும்
உலகில் வெப்ப அலைகள் ஏற்படும் பகுதிகளுள் ஒன்றாக இந்தியாவும் மாறி வருகிறது. இந்த ஆண்டு வெப்ப அலை ஏற்படுவது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புவியியல் அடிப்படையில் வெப்ப அலைகள் எப்போது ஏற்படும் என முன்கூட்டியே கணிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பதிவான தகவல்களின் அடிப்படையில், ஒவ்வொரு கோடையிலும் கோர் ஹீட்வேவ் மண்டலம் பகுதிகளில் வெப்ப அலைகள் பொதுவானவை என கணிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை மண்டலங்கள்
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிராவின் விதர்பா, மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகள் கோர்ஹீட்வேவ் மண்டலங்களாக அறியப்படுவதால், அங்கு ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் வெப்பம்
மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில் வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு மற்றும் நாட்டின் கிழக்கில் உள்ள சில பகுதிகளில் அதிக வெப்பநிலை இருக்கும் எனக் கூறியுள்ளது. இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் சில நகரங்கள் மற்றும் வட கிழக்கு மற்றும் தென்னிந்திய பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் பருவகால வெப்பநிலை சற்று கூடுதலாக இருக்கும் என கணித்துள்ளது.
உச்சபட்ச வெப்பநிலை
மத்திய மற்றும் பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களில் இயல்பை விட குறைவான வெப்பநிலை பதிவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், சண்டிகர், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உட்சபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இயல்புக்கு மாறான வெப்பநிலை
ஒடிசா, சட்டீஸ்கர், மகாராஷ்டிராவில் உள்ள கொங்கன் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். தென்னிந்திய மாநிலங்களில் இரவு நேரங்களில் இயல்புக்கு மாறான வெப்பநிலை இருக்கும் எனவும் கூறியுள்ளது.
புழுக்கம் அதிகரிக்கும்
பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் புழுக்கம் இருக்கும். மத்திய பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியான வெப்ப இரவுகள் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.