ரஜினியுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்க காலம் இருக்கிறது... அவர் இன்னும் அரசியலுக்கே வரவில்லை -அமித்ஷா
டெல்லி: நடிகர் ரஜினிகாந்துடன் பாஜக கூட்டணி சேர்வது பற்றி முடிவெடுக்க இன்னும் காலம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கே வராத சூழலில் கூட்டணி குறித்து இப்போது பேச ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளார்.
ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல்
மேலும், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவே தங்களுக்கு நெருக்கமான கட்சி என்றும் ஏற்கனவே இரண்டு தேர்தல்களை அந்தக் கட்சியுடன் இணைந்து சந்தித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தமிழக அரசியல் நிலவரத்தை தாம் கவனிக்கத் தவறுவதில்லை என்பதை அந்தப் பேட்டியின் மூலம் இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.
ரஜினி-அதிமுக
அமித்ஷாவின் இந்தக் கருத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருப்பதை அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிவர். தனது பேட்டியில் தமிழக அரசியல் குறித்து குறிப்பிட்டுப் பேசிய அமித்ஷா, ரஜினியையும் விட்டுக்கொடுக்கவில்லை, அதிமுகவையும் விட்டுக்கொடுக்கவில்லை. அதாவது ரஜினி -அதிமுக என்ற இரு விவகாரங்களையும் பேலன்ஸ் செய்துள்ளார்.
ரஜினி கட்சி
அதிமுக தான் எங்களுக்கு நெருக்கமான கட்சி என்று அமித்ஷாவே கூறியிருக்கிறார் என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவே விலகிச்சென்றாலும் கூட்டணியில் இருந்து பாஜக அதை விடாது எனத் தெரிகிறது. அதேபோல் ரஜினி கட்சி தொடங்கினால் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் உணர்த்தப்பட்டிருக்கிறது.
தேசியத் தலைமை
இதனிடையே தமிழகத்தில் பாஜக நிர்வாக குழுவை மாற்றியமைத்ததற்கு காரணம் கட்சியை இங்கு வலிமைப்படுத்தவே என அமித்ஷா கூறியிருக்கிறார். இதன் மூலம் பீகார் தேர்தலுக்கு பின்னர் பாஜக தேசியத் தலைமையின் கவனம் மேற்குவங்கம் மற்றும் தமிழகத்தை நோக்கி முழுமையாக திரும்பும் எனத் தெரிகிறது.