டெல்லி கலவரம்.. விளாசிய கோர்ட்டுகள்.. நெருக்கும் கட்சிகள்.. என்ன செய்யப் போகிறார் அமித்ஷா!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு டெல்லி வன்முறை மிகப்பெரிய தலைவலியாக மாறி உள்ளது. ஒருபக்கம் நீதிமன்றம் சரமாரி கேள்விகள், மறு புறம் எதிர்க்கட்சிகள் நெருக்கடி என அவருக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் நாட்டுக்கே அவர் உள்துறை அமைச்சர் என்பது ஒருபுறம் என்றால், டெல்லி காவல்துறைக்கு அவர் தான் பாஸ்.
டெல்லி வன்முறையை சிஏஏ ஆதரவு எதிர்ப்பாளர்கள் மோதல் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துவிட முடியாது. ஏனெனில் டெல்லியில் 1984ம் ஆண்டுக்குன் பின்னர் நடந்த மோசமான கலவரமாக டெல்லி உயர்நீதிமன்றமே தனது ஆதங்கத்தை இன்று வெளிப்படுத்தி உள்ளது. இன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது என்று சாட்டையை சுழற்றி உள்ளது.
இந்த வன்முறைக்கு என்ன காரணம், யார் காரணம், எப்படி நடந்து கொண்டிருக்கிறது எனப்தை கிட்டத்தட்ட டெல்லியில் இருந்து இயங்கும் இந்தியாவின் அத்தனை டிவி சேனல்களும் சொல்லிவருகின்றன. இந்த வன்முறைகளை ஒடுக்க வேண்டிய போலீசார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என அம்புகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
டெல்லிக்கு ராணுவம் தேவையில்லை.. போலீஸ் என்றால் யார் என்று காட்டுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி
ஊடகங்கள் காட்டின
இந்த வன்முறை முன்னின்று நடத்துபவர்கள் பலர் இளைஞர்கள் தான்... கையில் கம்புகள், இரும்பு தடிகள் என அச்சமூட்டும் வகையில் செல்லும் இவர்களை படம்பிடித்து ஊடகங்கள் காட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினர் இரண்டு நாட்களாக பல இடங்களில் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்பது அதை பதிவு செய்த ஊடகவியலார்களின் குற்றச்சாட்டு.
வெறுப்புணர்வு பேச்சு
டெல்லி வன்முறையில் அடித்துக்கொல்லப்படும் மக்களின் வீடியோக்களும், புகைப்படங்களும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதங்களில் வெளியாகி மக்களிடையே பெரும் அச்சத்தை விதைத்துவருகின்றன. மொத்த இந்தியாவும் இதை பார்த்து வருகிறது. இந்நிலையில் டெல்லி காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமித் ஷா ஏன் இன்னமும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதே சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
கபில் மிஸ்ராவின் பேச்சு
டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த அமித் ஷா தவறிவிட்டதாகவும் அவர் தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலர் குரல் எழுப்பி வருகிறார்கள். இது ஒருபுறம் எனில் எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதற்கு காரணம் பாஜக எம்பி கபில் மிஸ்ராவின் பேச்சு தான்.
வெறுப்புணர்வு பேச்சு
கபில் மிஸ்ரா மீது நிர்வாக ரீதியாகவோ, கட்சி ரீதியாகவோ இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பெரும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டெல்லியில் நடந்த வன்முறையானது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. பாஜக தலைவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்,.
ராணுவத்தை கூப்பிடுங்க
டெல்லியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய சோனியா காந்தி, வன்முறை தொடர்பாக உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்கவில்லையா? துணை ராணுவத்தை முன்கூட்டியே அழைக்காதது ஏன்? இந்த வன்முறைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.
அமித் ஷா அதிரடி
இப்படி எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில். டெல்லி வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு நேற்று இரவு முதல் தீவிரமாக செயல்பட்டு வரும் அமித் ஷா, அதற்காக சில அதிரடியான நடவடிக்களை எடுத்துள்ளார். எனினும் இனி வரும் நாட்களில் கலவரம் கட்டுக்குள் வரும் என்றாலும் இரண்டு நாளில் நடந்த வன்முறையின் கோரமுகத்திற்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார்கள். இந்த வன்முறையை ஒடுக்குவது மட்டுமல்ல, இதற்கு காரணமானவர்களையும் கடுமையாக தண்டித்தால் மட்டுமே இனி ஒரு கலவரம் உருவாகாது.