பூதாகரமாகும் எலக்ட்ரல் பாண்ட் சர்ச்சை.. பாஜகவிற்கு புது சிக்கல்.. தேர்தல் நிதி பத்திரத்தின் பின்னணி
தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக பெரிய அளவில் முறைகேடுகளை செய்துவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் வைத்துள்ளது.
Recommended Video
டெல்லி: தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக பெரிய அளவில் முறைகேடுகளை செய்துவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் வைத்துள்ளது.
இந்தியா முழுக்க தற்போது எலக்ட்ரல் பாண்ட் (Electoral Bonds) எனப்படும் தேர்தல் நிதி பத்திர சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய பாஜக அரசு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பத்திரங்கள் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த கட்சிக்கு பல கோடி கிடைத்துள்ளது.
பாஜக இதன் மூலம் மிகப்பெரிய நிதி மோசடியை செய்துள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் வைத்துள்ளது. தேர்தல் நிதி பத்திரங்கள் என்றால் என்ன? ஏன் அது இவ்வளவு பெரிய சர்ச்சைக்கு உள்ளாகிறது என்று இதில் தெரிந்து கொள்வோம்.
எப்படி இருந்தது
2017ம் வருடம் வரை அரசியல் கட்சிகள் நேரடியாக மட்டும் நிதிகளை பெற்றுவந்தது. அதாவது ஒரு நபர் அரசியல் கட்சி ஒன்றுக்கு நிதி வழங்க வேண்டும் என்றால் அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம், நேரடியாக பணம் கொடுக்கலாம், இல்லையென்றால் காசோலை கொடுக்கலாம்.
ஆனால் மாற்றமும்
ஆனால் மத்திய பாஜக அரசு இந்த பல்லாண்டு கால நடைமுறையை மாற்ற நினைத்தது. அதன்படி தேர்தல் நிதிக்கு எதிராக தேர்தல் நிதி பத்திரம் (Electoral Bonds) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த தேர்தல் நிதி பத்திரம் என்பது கொஞ்சம் சிக்கலானது. இதன் மூலம் பாரத் ஸ்டேட் பேங்க் வங்கிகளில் நிதி பத்திரங்கள் வழங்கப்படும்.
எப்போது வழங்கப்படும்
ஒவ்வொரு நிதி காலாண்டிலும் முதல் 10 நாட்கள் இந்த பத்திரங்கள் வழங்கப்படும். இந்த பத்திரங்களை வாங்கி அதை நிரப்பி வங்கிகளில் கட்சிகளின் கணக்குகளில் நிதியாக செலுத்த முடியும். இதன் மூலம் கருப்பு பணம் ஒழியும் என்று கூறி மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் இதன் மூலம் எந்த கட்சிக்கு யார் பணம் அளிக்கிறார்கள் என்ற விவரம் தெரியாது.
எப்படி வழங்கலாம்
அதாவது இந்திய குடிமகனோ அல்லது இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிறுவனமோ இந்த பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் அரசியல் கட்சிக்கு பணம் தர முடியும். 1000 ரூபாயில் இருந்து கோடி ரூபாய் வரை இந்த பத்திரங்கள் கிடைக்கும். இதில் நிதியை பெற்ற கட்சிக்கே தங்களுக்கு யார் நிதி வழங்கினார்கள் என்பது தெரியாது.
முழுக்க முழுக்க ரகசியம்
நிதி அளிப்பவரின் விவரம் வங்கிகளால் ரகசியமாக வைத்திருக்கப்படும். இதனால் இந்த திட்டம் பெரிய விமர்சனங்களை சந்தித்தது. இதற்கு எதிராக என்ஜிஓ ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. இந்த வழக்கில், ஒரு கட்சிக்கு எங்கிருந்து பணம் வரும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது அரசின் கொள்கை முடிவு என்று மத்திய அரசு வாதம் வைத்தது.
திட்டம் ஏன்
அதேபோல் இது கருப்பு பணத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட திட்டம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் நீதிபதிகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் கருப்பு பணம் இதனால் அதிகமாக மட்டுமே ஆகும், குறையாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் இதை உச்ச நீதிமன்றம் தடை செய்யவில்லை. மாறாக இதன் மூலம் பெறப்பட்ட பண விவரங்களை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வேறு சிக்கல்
அதேபோல் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கு பெற முடியும். அதற்கான சட்டத்திருத்தங்களையும் இந்தப் பத்திரங்களை அறிமுகம் செய்தபோது மத்திய அரசு செய்தது. பதிவு செய்யப்பட்ட தேர்தல் கட்சிகள் மட்டுமே அதுவும் 1%க்கும் அதிகமான வாக்குகள் பெற்று இருந்தால் மட்டுமே இந்த தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பணம் பெற முடியும்.
ஒரே வழி
இதனால் ஒரு கட்சிக்கு பணம் தர வேண்டும் என்றால் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் மட்டுமே தர முடியும். ஆனால் யார் தருகிறார்கள் என்று தெரியாது. அதனால் ஒரு பெரிய தொழில் அதிபர் அவருக்கு ஆதரவாக இருக்கும் கட்சிக்கு தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பணம் தரலாம். அவர்தான் பணம் கொடுத்தார் என்று யாருக்கும் தெரியாது. அவரையும், வங்கியையும் தவிர!
கார்ப்ரேட் ஆட்சி
இதனால் கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சிக்கு, வரியே இல்லாமல் பணம் கொடுக்கலாம். அவர்களை வளர்த்துவிட்டு தங்களுக்கு தேவையான விஷயங்களை சாதிக்கலாம். இதனால் இந்த தேர்தல் நிதி பத்திரங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கிறது.
பாஜக எப்படி
அதேபோல் பாஜகதான் இந்த தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அதிகம் பலன் அடைந்த கட்சி ஆகும். 2017-2019 தொடக்கம் வரை வந்த வந்த 6000 கோடி ரூபாயில் 95% தேர்தல் நிதி பத்திரங்கள் பாஜக கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் முதல் பில்லியன் டாலர் கட்சியாக பாஜக உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
என்ன குற்றச்சாட்டு
ஆனால் இப்போது ஏன் திடீர் என்று தேர்தல் நிதி பத்திரங்கள் சர்ச்சையாகிறது என்று கேட்கலாம். முதலில் லோக்சபா தேர்தலுக்கு மட்டுமே தேர்தல் நிதி பத்திரங்கள் வழங்கும் முறை இருந்தது. ஆனால் பிரதமர் மோடி, கர்நாடக தேர்தலுக்காகவும் இந்த முறையை கொண்டு வந்தார். இதற்காக அவர் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்தார் என்று செய்திகள் வெளியானது.
நிறைய பணம்
கர்நாடக தேர்தலில் இதன் மூலம் பாஜக அதிக பணம் பெற்று அதை செலவு செய்தது என்று புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனையை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. இதுதான் தற்போது தேர்தல் நிதி பத்திரங்கள் இந்தியா முழுக்க சர்ச்சையை ஏற்படுத்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.