நாடாளுமன்றத்தில் எழுப்பும் விவகாரங்கள் என்னென்ன?திமுக எம்பி டிஆர் பாலு டெல்லி பிரஸ்மீட்டில் விளக்கம்
டெல்லி: டெல்லியில் இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்பி டி ஆர் பாலு, இந்திய குடியுரிமை சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படும் ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
டெல்லியில் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக எம்பி டி ஆர் பாலு கலந்துகொண்டார். தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டம் நிறைவடைந்த பின்னர் எம்பி டி ஆர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். பியூஷ் கோயல் முன்னிலை வகித்தார். இதேபோல் மற்ற அமைச்சர்கள் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். ஸ்டாலினின் கருத்துக்களின் படி என்னென்ன பேச வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதித்து இருக்கிறோம். முதலில் கவன ஈர்ப்பு தீர்மானம்.
கவன ஈர்ப்பு தீர்மானம்: தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராகவும், அவர்களது கொள்கைகளுக்கு எதிராகவும், அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு கொண்டிருக்கின்ற ஆளுநர் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்றும் இதற்கான பதிலை அரசு தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். இதனை கவன ஈர்ப்பு தீர்மானமாக நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்திய குடியுரிமை சட்டம் நம்முடைய இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு மிக மிக ஊறு விளைக்கின்ற ஒரு சட்டம். இதில் இருக்கின்ற கருத்துக்கள், ஷரத்துகள் எல்லாம் நீக்கப்பட வேண்டும் என்று இந்த அவையில் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காக நோட்டீஸ் கொடுத்துள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அடிக்கடி பேசப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு புறம்பாக பேசப்படும் கருத்தாக உள்ளது. இது தொடர்பாகவும் விரிவாக பேச வேண்டும் என்பது குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டம்: இதே போல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டியதோடு அப்படியே உள்ளது. 5 ஆண்டாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது பற்றி அரசாங்கம் என்ன நினைக்கிறது என்பது குறித்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டில் சேது சமுத்திரம் திட்டத்தை தொடங்கலாம் என்று கூறியுள்ளது. எனினும் 2, 3 ஆண்டுகளாக அந்த திட்டம் தொடங்கப்படாமல் அப்படியே கிடப்பில் உள்ளது.
இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. எனவே இந்த திட்டத்தை தொடங்குவது குறித்து பேச வேண்டும். தொழிலாளர்கள், ஊழியர்களின் குறைந்த அளவு பென்ஷன் தொகை ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இதனை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். குறைந்தப்பட்சம் மாதம் ரூ.3000 பென்சன் வழங்க வேண்டும் என்பது தொடர்பாக பேச வேண்டும் என்பது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications