மோடி அப்படி சொன்னாரா?.. வெள்ளை மாளிகைக்கு கோபமாக கடிதம் அனுப்பிய மத்திய அரசு.. நீடிக்கும் பதற்றம்!
மத்திய அரசு தற்போது வெள்ளை மாளிகைக்கு வெளியுறவுத்துறை மூலம் கடிதம் அனுப்பி உள்ளது.
டெல்லி: மத்திய அரசு தற்போது வெள்ளை மாளிகைக்கு வெளியுறவுத்துறை மூலம் கடிதம் அனுப்பி உள்ளது. பிரதமர் மோடி குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கு விளக்கம் கேட்டு உள்ளது.
நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடந்த சந்திப்பு பெரிய பிரச்சனையாகி உள்ளது. காஷ்மீர் பிரச்சனை குறித்து இரண்டு நாட்டு அதிபர்களும் பேசிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் வெளியுறவு கொள்கை இதனால் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன கூறினார்
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்ரான் கானிடம் பேசிய டிரம்ப், பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க தயாராக இருக்கிறார். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவ வேண்டும் என்று அவர் என்னிடம் கோரிக்கை வைத்தார், என்று டிரம்ப் கூறினார்.
என்ன வழக்கம்
பொதுவாக இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை இரண்டு நாடுகள் மட்டுமே பேசி தீர்ப்பதாக இருந்தது. இதில் மூன்றாவதாக ஒரு நபர் எப்போதும் உள்ளே நுழைந்தது கிடையாது. ஆனால் தற்போது மோடியே டிரம்ப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்திய தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
என்ன மறுப்பு
இதற்கு இந்திய தரப்பில் ஏற்கனவே மறுப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக வெள்ளை மாளிகைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. மோடி குறித்து டிரம்ப் ஏன் அப்படி கூறினார், மோடி காஷ்மீர் பிரச்சனை குறித்து எப்போது பேசினார், என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.
தொடரும் பதற்றம்
டிரம்ப்பின் கருத்து காரணமாக இந்தியா அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கு அமெரிக்க தரப்பு என்ன பதில் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.