பெட்ரோல் விலையை நீங்க உயர்த்திவிட்டு.. எங்களை குறைக்க சொல்வது நியாயமா? நிர்மலாவிற்கு பிடிஆர் பதிலடி
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க சொன்னதற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கோரிக்கைக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி அளித்துள்ளார்.
நாடு முழுக்க சில்லறை வர்த்தக பணவீக்கம் உயர்ந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மீண்டும் மத்திய அரசு குறைத்துள்ளது. பணவீக்கம் அதிகரிக்க பெட்ரோல், டீசல் விலை காரணமாக இருந்ததால், அதன் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு - மக்களுக்கு 'இன்ப அதிர்ச்சி’ கொடுத்த மத்திய அரசு!

லிட்டர் பெட்ரோல்
இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 45 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.

நிர்மலா சீதாராமன் கோரிக்கை
இந்த நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மாநில அரசுகளும் எங்களை போல வரியை குறைக்க வேண்டும். முக்கியமாக கடந்த நவம்பரில் நாங்கள் வரியை குறைத்த போது, வரியை குறைக்காத மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு அரசு நவம்பரில் வரியை குறைக்கவில்லை. அதற்கு முன்பாக ஆகஸ்டில் வரியை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

வரி உயர்வு
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க சொன்னதற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கோரிக்கைக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி அளித்துள்ளார். அதில், எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் ஒன்றிய அரசே வரியை உயர்த்தியது.

நீங்கள்தான் உயர்த்தினீர்கள்
ஒன்றிய அரசு வரியை உயர்த்திய போது அதை பற்றி மாநிலங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. 2014ல் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 23 ரூ, டீசல் லிட்டருக்கு 29 ரூபாய் வரியை உயர்த்தியது. தற்போது அதில் 50 சதவிகிதத்தை குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்க சொல்கிறார்கள். இதுதான் உங்கள் கூட்டாச்சியா? என்று குறிப்பிட்டு உள்ளார்.

பிடிஆர் விளக்கம்
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒப்பீட்டளவில் பேச வேண்டும் என்றால் 2006-2011 வரை மூன்று முறையும், தற்போது ஆட்சிக்கு வந்த பின் ஒருமுறையும் வரியை குறைத்து உள்ளோம். அதிமுக அரசில் இடையில் வரியை உயர்த்தி உள்ளனர். அதன்பின் நாங்கள் குறைத்து இருக்கிறோம். இதை எல்லாம் சேர்த்து கணக்கிட்டால் மொத்தமாக பெட்ரோல் மீது 8 ரூபாய் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. டீசல் வரி 11 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

யார் உயர்த்தியது?
ஒப்பீட்டளவில் 2014-2021 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசை விட மத்திய அரசுதான் மிக மிக அதிகமாக உயர்த்தி உள்ளது. மாநில அரசு உயர்த்தியதும் அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வரி மட்டுமே. தனது வருவாயில் 18-20 சதவிகிதத்தை எரிபொருள் மீதான வரி மூலமாக பெறுகிறது ஒன்றிய அரசு. ஏன் மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று ஒன்றிய அரசு கேட்கிறது.

பிடிஆர் பழனிவேல் பதிலடி
தமிழ்நாடு அரசு ஏற்கனவே வரியை குறைத்துவிட்டது. நாங்கள் ஆகஸ்ட் மாதமே குறைத்துவிட்டோம். என்னுடைய கேள்வி.. நாங்கள் மூன்று முறை வரியை உயர்த்தி இருந்தால் நீங்கள் சொன்னபடி வரியை குறைக்கலாம். ஆனால் நாங்கள் உங்கள் அளவிற்கு வரியை உயர்த்தவில்லையே? பின்னர் ஏன் எங்களிடம் வரியை குறைக்க சொல்கிறீர்கள்? இது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது கிடையாதா? என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.