மோடி சொன்ன ஆத்ம நிர்பார் என்பது என்ன? கூகுளில் வலைவீசிய இந்தியர்கள்- ட்விட்டரிலும் களைகட்டிய விவாதம்
டெல்லி: நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஆத்ம நிர்பார் பாரத் அபியான் என்ற பெயரில் ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார பேக்கேஜ் வழங்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து ஆத்ம நிர்பார் என்றால் என்ன என்பது குறித்து சமூக வலைதளங்களில் தேடுதல்களும் விவாதமும் களைகட்டி வருகிறது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் லாக்டவுன் வரும் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது.
எக்சிட் பிளானை பொறுத்தே முடிவு.. மாநில அரசுகளிடம் கேட்ட மோடி.. லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும்?
ஆத்ம நிர்பார் பாரத் அபியான்
இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த உரையில், லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என அறிவித்தார். அத்துடன் 2020-ம் ஆண்டுக்கு ஆத்ம நிர்பார் பாரத் அபியான் என்ற பெயரில் ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார பேக்கேஜ் குறித்தும் பிரதமர் மோடி அறிவித்தார்.
எது எல்லாம் உள்ளடங்கும்?
இந்த பொருளாதார திட்டம் ஏற்கனவே அறிவித்த அறிவிப்புகளையும் உள்ளடக்கியதா இல்லையா? என்பது குறித்து ஒருபக்கம் விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட லோக்சபா எம்.பி. ரவிக்குமார், 20 லட்சம் கோடி என்பதில் ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்த 4.5 லட்சம் கோடி திட்டமும் அடங்கும் என்கிறார் பிரதமர்.நாளை நிதி அமைச்சர் அறிவிக்கும்போது அதில் எதெதெல்லாம் உள்ளடங்கப் போகிறதோ தெரியவில்லை என விமர்சித்திருக்கிறார்.
ஆத்ம நிர்பார் அர்த்தம் என்ன?
மேலும் பிரதமர் மோடி குறிப்பிட்ட ஆத்ம நிர்பார் என்பதற்கு என்ன அர்த்தம் என்பது தொடர்பாகவும் கூகுளில் வலைவீசி தேடியுள்ளனர் நெட்டிசன்கள். அதுவும் பிரதமர் மோடி பேசிய ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே இந்த தேடுதல் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் மிக அதிக அளவில் இந்த ஆத்ம நிர்பார் குறித்து தேடியிருக்கின்றனர். அதேபோல் மகாராஷ்டிரா, குஜராத், உ.பி, ம.பி. மாநில மக்களும் இந்த தேடுதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
களைகட்டும் விவாதம்
கூகுளில் தேடியதுடன் மட்டும் நிற்கவில்லை. சமூக வலைதளங்களிலும் ஆத்ம நிர்பார் என்றால் என்ன என்பது குறித்து பெரும் விவாதமே களைகட்டியிருக்கிறது. இந்தியர்கள் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே ஆத்ம நிர்பார் என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இன்னொரு பக்கம் மோடியின் பேச்சு, இந்திராவின் மேற்கோள்களை உள்ளடக்கியதாக இருந்தது என்கிற விவாதமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.