என்னாச்சு அகிலேஷ் யாதவுக்கு.! ஆளையே காணல.. மக்களவையில் மூணு நாள் மட்டுமே அட்டெண்டன்ஸ்
டெல்லி: 17-வது மக்களவையின் கூட்டம் கடந்த மாதம் 17-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ், இதுவரை மூன்று நாட்கள் மட்டுமே இந்த கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நடபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் 2-வது முறையாக வெற்றி பெற்றார். ஆனால் மாயாவதியுடன் கூட்டணி வைத்த அவரது சமாஜ்வாதி கட்சி, உத்தரப்பிரதேசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து போட்டியிட்டதில் 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
மக்களவையில் சுமார் 350-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. இதில் 303 உறுப்பினர்கள் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் எதிர்க்கட்சியின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள அகிலேஷ் யாதவின் குரல் இன்னும் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கவில்லை. கடந்த ஜூன் 17 அன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து அவர் அதிகமாக நாடாளுமடன்றத்தில் தென்படவேயில்லை.
நல்ல பேச்சாளராக அறியப்படும் அகிலேஷ் யாதவ், இன்னும் நாடாளுமன்றத்தில் எந்த உரையும் நிகழ்த்தவில்லை. குடியரசுத்தலைவர் உரை தொடர்பான விவாதத்தில் கூட அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை.
இந்த கூட்ட தொடர் துவங்கிய இரண்டு வாரங்களை கடந்து விட்ட நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், தற்போது வரை மூன்று முறை மட்டுமே நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த 3 வருகைகளில் ஒன்று மக்களவையில் அவர் எம்பியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நாளும் அடங்கும்.
மக்களவையில் சமாஜ்வாதி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பேரில், அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் முக்கிய தலைவர்களாக உள்ளனர். இதில் முலாய் சிங்கிற்கு 79 வயதாவதால் வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக, மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் அகிலேஷ் யாதவும், மக்களவை கூட்டத்தில் உரிய முறையில் பங்கேற்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அகிலேஷ் யாதவ், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளதாக மக்களவை செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இது குறித்து அகிலேஷ் யாதவின் உறவினரான ராஜ்யசபா உறுப்பினர் ராம் கோபால் கூறுகையில், அவர் சில சொந்த காரணங்களுக்காக வெளியில் சென்றுள்ளார். நிச்சயம் அவர் மக்களவை கூட்டத்திற்கு வருவார். அநேகமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஜூலை 5-ம் தேதி அகிலேஷ் யாதவ் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றார்.