இந்தியா சீனா 1962 போர்: ஆமா.. இந்திரா, ஜெயலலிதா, சாவித்திரி கொடுத்த நகைகள் என்னவானது?
டெல்லி: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டு இருக்கும் எல்லைப்பகுதிக்கு நேற்று பிரதமர் மோடி சென்று இருந்தார். வந்தே மாதரம் என்று கூறியும், திருக்குறளை கூறியும் ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார். இன்னும் லடாக் பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது.
Recommended Video
கடல் மட்டத்தில் இருந்து 3,000 மீட்டர், அதாவது 9,800 அடி உயரத்தில் இருக்கும் லடாக் மலைப்பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி உற்சாகம் அளித்தார். இங்கு பணிபுரிபவர்களுக்கு போதிய ஆக்சிஜன் கூட கிடைக்காது. அந்த அளவிற்கு உயரமான இடம்.
இந்த நேரத்தில் நாம் இந்தியா சீனா இடையே நடந்த போரின்போது இந்தியாவில் நடந்த சில நிகழ்வுகளைத் திரும்பிப் பார்ப்போம்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் 1962ல் போர் நடந்தது. எல்லையில் இந்தியா, பூடான், திபெத் சந்திப்பில் இருக்கும் தோலா போஸ்டை சீனா ஆக்கிரமித்தது. சட்ட ரீதியாக தங்களுக்குள் வரையறுத்துக் கொள்ளாத எல்லைக் கோட்டுப் பகுதியில் சீனாவும், இந்தியாவும் தங்களுக்குள் ஒரு எல்லையை பகிர்ந்து கொண்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன.
அந்த மாதிரியான இந்திய பகுதிக்குள் சீனா 60 பேருடன் முதலில் ஊடுருவியது. பின்னர், பெரிய பலத்துடன் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி லடாக்கின் சுசுல் பகுதியில் இருந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் வால்லாங் வரையிலான நிலத்தை சீனா ஆக்ரமித்தது.
எதிர்ப்பார்க்காத சீனாவின் ஊடுருவலை முறியடிக்க அப்போதைய பிரதமர் நேரு மக்களிடம் நிதியுதவி கேட்டார். நகைகள் வழங்குமாறு பெண்களை கேட்டுக் கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு மகனை ராணுவத்திற்கு அனுப்புவதற்கு 250 குடும்பங்களில் முடிவு செய்து அறிவித்தனர்.
பல்வேறு தரப்புகளிலும் இருந்து 220 மில்லியன் டாலர் நிதி குவிந்தது. நேருவின் மகளும், மறைந்த பிரதமருமான இந்திரா காந்தியும் தனது நகைகளை வழங்கினார்.
தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது நகைகளை கழற்றிக் கொடுத்தார். சிவாஜி கணேசன் நிதியுதவி அளித்தார். மறைந்த நடிகை சாவித்திரி தனது 100 பவுன் நகைகளைக் கொடுத்தார். இதுமட்டுமில்லை, கலைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி நிதி வசூலித்துக் கொடுத்தனர்.
அப்போது நாடு சுதந்திரம் பெற்று 15 ஆண்டுகளே ஆகி இருந்தது. இதனால், நாடு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது சீனாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
மாஸ்க்கே போடலை.. கேரம் விளையாடிட்டிருக்காங்க.. போய் தடுங்க.. போலீஸுக்கு இன்பார்ம் செய்த ராமதாஸ்!
வசூலிக்கப்பட்ட நகைகளில் அனைத்தும் போருக்கு பயன்படுத்தப்படவில்லை. பெரும்பாலான நகைகள் இந்திய ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டதாக அவ்வப்போது தகவல் வெளியானது. ஆனால், அந்த நகைகள் இன்னும் இருக்கிறதா? அல்லது அவை உருக்கப்பட்டு இந்திய கஜானாவில் சேர்க்கப்பட்டதா? போன்றவற்றுக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை.
சீனா ஒவ்வொரு முறையும் தனது இந்திய ஊடுருவல் மூலம் இந்த நிதியையும், நகைகளையும், இந்திய மக்களின் தேச பக்தியையும் நினைவூட்டி வருகிறது.