காஷ்மீர் விவகாரம்.. டிலிமிட்டேஷனை வலியுறுத்தும் பிரதமர் மோடி.. என்ன காரணம்?இதில் யாருக்கு என்ன லாபம்
டெல்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், டிலிமிட்டேஷனில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த டிலிமிட்டேஷனுக்கு என்றால் என்ன என பார்ப்போம்.
காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது. மேலும், மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஆளுநரே அங்கு அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வந்தார். சுமார் 2 ஆண்டுகளாக அங்கு எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் இல்லாமல் இருந்தது.
ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் விடாப்பிடி.. மோடியுடன் நடந்த 3 மணி நேர சந்திப்பில் என்ன நடந்தது?
அனைத்துக் கட்சி கூட்டம்
இந்தச் சூழ்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் காஷ்மீரை சேர்ந்த 14 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் காஷ்மீருக்கு தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
காஷ்மீர் டிலிமிட்டேஷன்
காஷ்மீர் மாநிலத்தில் டிலிமிட்டேஷன் செய்யும் நடவடிக்கைகளில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். இது பற்றி பிரதமர் மோடி கூறுகையில், "காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே நமது முன்னுரிமை. அங்கு டிலிமிட்டேஷன் நடந்தால் தான் தேர்தல்கள் விரைவாக நடத்த முடியும். அப்போது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்து காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் தொடரும்" என்றார்.
காஷ்மீர் கட்சிகள்
ஆனால் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்துள்ளார். இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களிலும் 2026ஆம் ஆண்டு வரை டிலிமிட்டேஷன் வேண்டாம் என முடிவெடுத்துள்ள நிலையில், காஷ்மீருக்கு மட்டும் ஏன் இப்போதே டிலிமிட்டேஷன் செய்யப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார், மேலும், காஷ்மீரிலுள்ள அனைத்து கட்சிகளும் டிலிமிட்டேஷனுக்கு எதிராகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டிலிமிட்டேஷன் என்றால் என்ன
டிலிமிட்டேஷன் என்றால் தொகுதி மறுவரையறை. குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்னர், மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகள் மறுசீரமைக்கப்படும். இந்தப் பணிகள் சுதந்திர அமைப்பான டிலிமிட்டேஷன் கமிஷனால் மேற்கொள்ளப்படும். இதில் அரசு அல்லது அரசியல் கட்சிகளால் தலையிட முடியாது. வழக்கமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்படும் இதில். தேர்தல் கமிஷனர், மாநில தேர்தல் ஆணையர்கள், காஷ்மீர் மாநிலத்தின் ஐந்து எம்பிகள் இடம்பெற்றிருப்பார்கள். ஆனாலும், எம்பிகளின் கருத்தை கமிஷன் கட்டாயம் கேட்க வேண்டும் என எந்தவொரு நிபந்தனையும் இல்லை.
கடைசியாக எப்போது செய்யப்பட்டது
காஷ்மீரில் கடைசியாக 1995ஆம் ஆண்டு டிலிமிட்டேஷன் செய்யப்பட்டது. இது 1981ஆம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 1991ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அங்கு நடக்கவில்லை. 2001இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற போதிலும், 2026ஆம் ஆண்டு வரை தொகுதி மறுசீரமைப்பிற்குத் தடை விதிக்கும் வகையில் காஷ்மீர் சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டது.
புதிய சட்டசபை
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இனி அந்த சட்டம் செல்லுபடியாகாது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படையிலேயே டிலிமிட்டேஷன் செய்யப்படும். இதற்கான கமிஷனை மத்திய அரசு கடந்த ஆண்டு ஏற்படுத்தியது. கடந்த 2019இல் இயற்றப்பட்ட காஷ்மீர் மறுசீரமைப்பு திட்டத்தின்படி, காஷ்மீர் புதிய சட்டசபை 90 இடங்களைக் கொண்டிருக்கும். இது முன்பு இருந்ததைவிட ஏழு இடங்கள் அதிகமாகும்.
எதிர்ப்பு ஏன்
பழைய சட்டசபையில் காஷ்மீரில் 46 இடங்களும், ஜம்முவில் 37 இடங்களும் இருந்தன. இப்போது 2011ஆம் ஆண்டு மக்கள்தொகையில் காஷ்மீரின் மக்கள்தொகை 68 லட்சமாகவும் ஜம்மு மக்கள்தொகை 53 லட்சமாகவும் உள்ளது. அதாவது இந்த முறை ஜம்முவை காட்டிலும் காஷ்மீருக்கு கூடுதல் சட்டசபை இடங்கள் கிடைக்கலாம். காஷ்மீருக்கு மட்டும் தனியாக டிலிமிட்டேஷன் செய்யக்கூடாது என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் டிலிமிட்டேஷன் செய்யும்போது, காஷ்மீருக்கும் டிலிமிட்டேஷன் செய்ய வேண்டும் என்பதைக் அங்குள்ள கட்சிகளின் வாதமாக உள்ளது.