சுதந்திர தினம்.. இந்திய தேசிய கீதமும், தேசிய பாடலும்.. யார் எழுதியது.. என்ன பின்னணி?
டெல்லி: நாடு சுதந்திரமடைந்து 73 வருடங்கள் நிறைவடைந்து, 74வது ஆண்டில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி காலடி எடுத்து வைக்கிறது.
சுதந்திர வேள்வித் தீயில் நெய் ஊற்றி ஜூவாலை வளர்த்த தியாகிகளை போற்றி புகழ இந்த நாளில் ஒவ்வொரு இந்தியனும் உறுதி ஏற்க வேண்டும். இன்னொரு பக்கம், நமது தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் பற்றிய தகவலையும் அறிந்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ஜன கண மன என துவங்கும் பாடல், நமது தேசிய கீதம் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னணி என்ன? தேசிய பாடல் எது என்பது பற்றியும் பார்ப்போமா?
தீயாய் பரவும் கொரோனா.. நாளை காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடியை வீடியோவில் அழைக்கிறார் மோடி
தேசீய கீதம்
நமது தேசிய கீதமான ஜன கண மன வங்காள மொழியில் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்டது. இந்த பாடலை பின்னர் இந்தி-உருது மொழிகளில் இந்திய தேசிய ராணுவ அதிகாரி ஆபிட் ஹசன் சஃப்ரானி, சுதந்திர போராட்ட வீரர் ராம் சிங் தாக்கூர் இசையுடன் மொழிபெயர்த்தனர். முதல் வரிகளை இந்தியாவின் தேசிய கீதமாக இந்திய அரசியலமைப்பு 1950 24 ஜனவரி அன்று ஏற்றுக்கொண்டது.
தேசிய பாடல்
1875 ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவால் எழுதப்பட்ட 'வந்தே மாதரம்', 'ஆனந்த்மத்' என்ற வங்கமொழி நாவலில் வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் தேசிய பாடல். 1896 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் நடத்திய இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வில் முதன்முதலில் வந்தே மாதரம் பொது நிகழ்வில் பாடப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக வந்தே மாதரம் மாறியது.
வந்தே மாதரம்
வந்தே மாதரம் பாடல், மக்களிடம் எழுச்சியை உருவாக்குவதை அறிந்து, ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. சுதந்திரப் போராட்ட தியாகி பிகாஜி ருஸ்டோம் காமா மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடியின் நடுவே வந்தே மாதரம் என்ற சொற்களும் இருந்தன.
வழிபாடு
இந்த பாடல் சுதந்திர வேள்வியை மூட்டியபோதிலும், இஸ்லாமியர்கள் இப்பாடலை பாடுவதில் தயக்கம் ஏற்பட்டது. சுதந்திரத்திற்கு முன்னர் முகமது அலி ஜின்னா இப்பிரச்சினையை வெளிப்படையாக கூறியிருந்தார். கடவுளை தவிர வேறு யாரையும் வழிபடக் கூடாது என்பது இஸ்லாமின் அடிப்படை என்பதால், தாய்நாட்டை வழிபடுவது போல வரும் வரிகளை பாடுவதில் தயக்கம் ஏற்பட்டதை பல இஸ்லாமிய தலைவர்கள் எடுத்துக் கூறினர். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்திய தேசிய காங்கிரஸ் 1937 ஆம் ஆண்டில், பாடலின் கடைசி மூன்று வரிகைளை கைவிட முடிவு செய்தது. முதல் இரண்டு, வரிகளை தொடர முடிவு செய்யப்பட்டது.