தலைமை நீதிபதிக்கு எதிரான விசாரணை விவரம் வெளியாகாதது ஏன்? இந்திரா ஜெய்சிங் வழக்கில் நடந்தது என்ன?
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான, பாலியல் புகாரை விசாரித்த நீதிபதிகள் குழு, தங்கள் விசாரணை அறிக்கை விவரங்களை வெளியிடாமல் இருக்க, இந்திரா ஜெய்சிங் வழக்கு ஒரு உதாரணமாக காட்டப்பட்டது.
ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி, 22 நீதிபதிகளுக்கு பிரமாண பத்திரத்தை அனுப்பி வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த புகார் தொடர்பாக, மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.பாப்டே தலைமையில் இரு பெண் நீதிபதிகளும் அடங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய, விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி டிஸ்மிஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார்.. உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்.. பலர் கைது!
சிறு அறிவிப்பு
இதுதொடர்பாக, ஒரு சிறிய அறிவிப்பு மட்டும் உச்சநீதிமன்றத்தின் வெப்சைட்டில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 2003ஆம் ஆண்டு இந்திரா ஜெய்சிங் மற்றும் உச்சநீதிமன்றம் மற்றும் பிறர் நடுவேயான வழக்கு தீர்ப்பு அடிப்படையில் இந்த விசாரணை குழுவின் விசாரணை அறிக்கை வெளிப்படையாக தெரிவிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
|
இந்திரா ஜெய்சிங் அதிருப்தி
இது குறித்த தகவல் வெளியானதும், மூத்த வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். எனது பெயரில் இது வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். "இது சரி கிடையாது. அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள வழக்கு 2003 ஆம் ஆண்டு, தகவல் அறியும் உரிமை சட்ட காலத்திற்கு முன்பானதாகும், அதுவும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதான பாலியல் புகார் தொடர்பானதுதான்" என்று கூறியுள்ளார்.
கர்நாடக ஹைகோர்ட் நீதிபதிகள்
அது என்ன இந்திரா ஜெய்சிங் வழக்கு? என்ற ஆர்வம் கண்டிப்பாக எல்லோருக்கும் எழுவதுதான். அதுகுறித்த ஒரு பார்வை இதோ: இந்திரா ஜெய்சிங் வழக்கு விசாரணையின் தீர்ப்பு என்பது, 2003ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி.மாத்தூர் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வால் பிறப்பிக்கப்பட்டதாகும். கர்நாடக உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகளுக்கு எதிராக கொடுக்கப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக, மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு ஒன்று அப்போது அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை தலைமை நீதிபதிக்கு வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அந்த விசாரணை அறிக்கையை வெளிப்படையாக வழங்க வேண்டும் என்று இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜேந்திர பாபு மற்றும் மாத்தூர் அமர்வு, இதுபோன்ற விசாரணைக் குழு என்பது, புகாரில் உண்மை உள்ளதா என்ற விபரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறியும் நோக்கத்தில் அமைக்கப்படுவதுதானே தவிர பொதுமக்கள் பார்வைக்காக அல்ல என்று அறுதியிட்டு தெரிவித்தது.
தலைமை நீதிபதி திருப்தியே முக்கியம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விசாரணை குழுவின் பரிந்துரைகளால் திருப்தி அடைந்தால் அத்தோடு அந்த வழக்கு முடித்து வைக்கப்படும். ஒருவேளை நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு, அந்த புகாரில், மேற்கொண்டு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தால், அதை தலைமை நீதிபதி பரிசீலித்து, உத்தரவிடுவார் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.
3 நீதிபதிகள் குழு
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கு, எதிராக பாலியல் புகார் எழுந்த நிலையில், அப்போதைய உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதி ஜி.பி. பட்நாயக், பாம்பே ஹைகோர்ட் தலைமை நீதிபதி சி.ஜே.தாக்கர், கேரளா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எல்.குப்தா, மற்றும் ஒடிசா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழுவை விசாரணைக் குழுவை அமைத்தார்.
இதுதான் அந்த வழக்கு
இந்த குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பின்னர் பதவிக்கு வந்த வி.என்.காரே-விடம் விசாரணை அறிக்கையை வழங்கியது. இந்த விசாரணை அறிக்கை அம்சங்களை வெளிப்படுத்த இந்திரா ஜெய்சிங் வழக்கு தொடர்ந்தபோதிலும், அதை 2 நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டதைத்தான், இப்போதும் மேற்கோள் காட்டியுள்ளது உச்சநீதிமன்றம்.