என்ன நடக்கிறது ராஜஸ்தானில்.. கட்சித் தாவல் தடைச் சட்டம் சொல்வது என்ன? யாருக்கு சாதகம்?- விளக்கம்
டெல்லி: அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணை, அல்லது கட்சி தாவல் தடை சட்டம் என்பது, ராஜஸ்தான் அரசியல் கலவரத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
ராஜஸ்தானின் துணை முதல்வராக பதவி வகித்த சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அந்த மாநில சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளார் சச்சின் பைலட்.
எனவேதான் கட்சி தாவல் தடை சட்டம் தொடர்பான விவாதம் மறுபடி நாடு முழுக்க எழுந்துள்ளது. அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணைப்படி, இரண்டு காரணங்களின் கீழ் எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்யலாம். "வேண்டுமென்றே கட்சியில் இருந்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் (பாரா 2(1)(a)) அல்லது தான் சார்ந்த அரசியல் கட்சியின் உத்தரவை ஏற்காமல், சபையில் மாற்றி வாக்களிப்பது அல்லது வாக்களிப்பதை தவிர்ப்பது, பாரா (2(1)(b)) ஆகிய இரண்டு காரணங்களால் ஒரு எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்ய முடியும்.
நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... அரசியல் நிலவரம் பற்றி ஆலோசனை..?
காங்கிரசுடன் இணைந்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள்
ஒருபக்கம் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்பான தகுதிநீக்க பிரச்சினையாக இது பார்க்கப்பட்டாலும், மற்றொரு பக்கம் பகுஜன் சமாஜ் கட்சியின் கொறடா உத்தரவும் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள், கடந்த சட்டசபைத் தேர்தலின்போது வெற்றிபெற்றனர். ஆனால், பிறகு இவர்கள் காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனர். அனைத்து பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்களும் இவ்வாறு இணைத்துக் கொண்டதால், கட்சி தாவல் தடை சட்டம் அவர்கள் மீது பாய முடியாது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது அரசுக்கு எதிராக இவர்கள் வாக்களிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் மிஸ்ரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் வாதம்
கொறடா உத்தரவை மீறினால் 6 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. ஆனால், அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணையின்கீழ் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் காங்கிரசுடன் இணைந்ததை, ராஜஸ்தான் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தை நாடியது பகுஜன் சமாஜ் கட்சி. அதில் இன்னமும் தீர்ப்பு வெளியாகவில்லை. காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் இணைப்புக்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை பாஜக எம்எல்ஏ ஒருவர் நாடி இருந்தார். ஆனால் அந்த வழக்கை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
கொறடா உத்தரவு
சட்ட வல்லுநர்கள், இது தொடர்பாக கூறுகையில், சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக தங்கள் கட்சியின் கொறடா யார் என்பதை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்கும். ராஜஸ்தான் மாநில சட்டசபையில் பகுஜன் சமாஜ் கட்சியின் கொறடாவாக சதீஷ் மிஸ்ரா நியமிக்கப்பட்டிருந்தால், அவர் பிறப்பித்துள்ள இந்த கொறடா உத்தரவு செல்லுபடியாகும் என்கிறார்கள்.
தேசிய கட்சி
சதீஷ் மிஸ்ரா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பகுஜன் சமாஜ் கட்சி என்பது தேசிய கட்சி. மாநில அளவில் அந்த கட்சி இணைப்பு நடத்த முடியாது. ராஜஸ்தானில் 6 எம்எல்ஏக்கள் காங்கிரசுடன் இணைந்தது செல்லத்தக்கது கிடையாது என்று கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்காக வாதிடும் மூத்த வழக்கறிஞர் சுனில் பெர்ணான்டஸ் இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணை, ஒரு தேசியக் கட்சியின், சட்டசபை குழு மற்றொரு தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பு இந்த இணைப்பு நடந்துள்ளது. ஆனால் திடீரென பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை இப்போது விழித்துக் கொண்டது போல இந்த இணைப்பு செல்லத்தக்கது கிடையாது என்று தெரிவித்துள்ளது. எனவே இது தவறான முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபை குழுவிற்கு அதிகாரம்
சுனில் பெர்ணான்டஸ் மேலும் கூறுகையில், அரசியல் சாசனத்தின் பத்தாவது அட்டவணையின் கீழ், தேசிய கட்சியில் இணைந்து கொள்ள அந்தந்த மாநில சட்டசபை கட்சி குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் சட்டசபை குழுவின் பெரும்பான்மையினர், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொண்டதில் தவறு கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் இவ்வாறு கட்சிகள் இணைந்து கொள்வது என்பது புதிது கிடையாது. ஏற்கனவே கோவா மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். ராஜ்யசபாவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 எம்பிக்கள் பாஜகவுடன் கைகோர்த்தனர்.
மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள்
மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் தங்களது கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்து கொள்ள விரும்பினால் அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது. 1985 ஆம் ஆண்டு அப்போதைய ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அப்போதுதான் கட்சி தாவல் தடைச் சட்டம் என்ற பிரிவு இதில் இணைக்கப்பட்டது. கட்சிகளின் கட்டமைப்பையும், கட்டுப்பாட்டையும் பாதுகாக்க இந்த சட்டம் அவசியம் என அப்போதைய அரசு கருதி இந்த நடவடிக்கையை எடுத்தது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு காலத்தில் 2003ஆம் ஆண்டு இந்த சட்டம் திருத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தனி குழுவாக செயல்பட்டால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற பிரிவு, அப்போது நீக்கப்பட்டது.