ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகனா? உண்மை என்ன? பாஜகவின் குற்றச்சாட்டின் பின்னணி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா, அவர் இந்திய குடிமகன் கிடையாதா என்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா, அவர் இந்திய குடிமகன் கிடையாதா என்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பான முழு உண்மை இப்போது வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீஸ்தான் தற்போது தேசிய அரசியலில் ஹாட் டாப்பிக்.
ஆனால் இதற்கு பின் பல காரணங்கள், பல சர்ச்சைகள் உள்ளது. 2015ல் தீர்க்கப்பட்ட பிரச்சனை மீண்டும் தற்போது எழுந்துள்ளது.
டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் கை கோர்க்க வேண்டும்.. தமிழகத்துக்கு அதுதான் நல்லது.. செய்வார்களா?
எப்போது தொடங்கியது
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த போதுதான் இந்த பிரச்சனை தொடங்கியது. ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரளாவில் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் அமேதியில் போட்டியிடுகிறார். இதில் ராகுல் காந்தியின் வேட்புமனு மிக மிக தாமதமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ராகுல் இரட்டை குடியுரிமை வைத்து இருக்கிறார் என்று அமேதியில் சுயேச்சை வேட்பாளர் துருவ் லால் என்பவர் புகார் அளித்து இருந்தார்.
சர்ச்சை எழுந்தது
அப்போதுதான் ராகுலின் குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த புகாரை நிராகரித்துவிட்டது. துருவ் லாலின் புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என்று புகாரை தள்ளுபடி செய்தது. அதேபோல் ராகுல் காந்தியின் வேட்புமனுவும் இரண்டு தொகுதிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்த பிரச்சனை
ஆனால் இந்த பிரச்சனை இதோடு முடியவில்லை. நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இது குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
உண்மை என்ன
ராகுல் காந்திக்கு எதிராக சுப்பிரமணியன் சாமி அளித்த புகார்தான் இந்த சர்ச்சைக்கு காரணம். 2015ல் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். அதன்படி பிரிட்டனில் உள்ள பேக்ஆப்ஸ் என்று நிறுவனத்தில் ராகுல் காந்தி முக்கிய பொறுப்பில் உள்ளார். அதில் ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவரின் பிறந்த ஊர் பிரிட்டன் என்றும் உள்ளது என்று குறிப்பிட்டார்.
சர்மா வழக்கு
இதையடுத்து வழக்கறிஞர் எம். எல் சர்மா என்பவர் 2016ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் ராகுலின் குடியுரிமை குறித்து விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல் தத்து தலைமையிலான அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் எம். எல் சர்மாவை மிக கடுமையாக கண்டிக்கவும் செய்தது.
சொன்னது என்ன
இது ஒரு மிக மிக தவறான குற்றச்சாட்டு. நீதிமன்றத்தின் நேரத்தை இப்படி வீணடிக்க கூடாது. ஒரு சட்டத்தை வைத்து இப்படி சிலரை பழி வாங்க பொய்யான புகார்களை அளிப்பது மிக மிக தவறான விஷயம் என்று கூறி, இந்த ஆதாரம் சரியானது கிடையாது என்று 2015லேயே உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
பொதுவாக என்ன
இந்தியாவில் இரட்டை குடியுரிமை கிடையாது. வெளிநாட்டில் நாம் குடியுரிமை வைத்து இருந்தால், இந்திய குடியுரிமையை திரும்ப அளிக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ராகுல் இந்திய குடிமகன் இல்லையென்றால் மத்திய அரசு கடந்த ஐந்து வருடத்தில் எப்போதோ அவரது எம்.பி பதவியை பறித்து இருக்கலாம்.
தேர்தல் நேரம்
இந்த நிலையில்தான் தள்ளுபடி செய்யப்பட பழைய ஆதாரத்தை வைத்து உள்துறை அமைச்சகம் அவருக்கு தேவையில்லாமல் நோட்டீஸ் அனுப்பி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதே பழைய ஆதாரத்தை வைத்து மீண்டும் உள்துறை அமைச்சகம் ராகுலிடம் விளக்கம் கேட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்ப பாஜக இப்படி செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.