ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் யாருக்கு நன்மை?
டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை நாடு முழுக்க, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள், அமல்படுத்தப் போவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதன் முக்கியத்துவம் என்ன? யாருக்கு என்ன பலன் என்பது பற்றி பார்க்கலாமா.
இப்போது ஒரு மாநிலத்தில் உள்ளவர், தனது ரேஷன் கார்டை வைத்து, அந்த ஒரு குறிப்பிட்ட ரேஷன் கடையில்தான் பொருட்களை வாங்க முடியும். ஆனால், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்தால், எந்த மாநிலத்தில் உள்ள பொது விநியோக கடையிலும், அந்தந்த மாதத்திற்கான தனது பங்கினை பெற முடியும்.
நான் எதற்காக, எனது ரேஷன் கார்டை வைத்து, அடுத்த மாநிலத்திற்கு சென்று பொருள் வாங்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு எழக்கூடிய கேள்விதான் இது. ஆனால் இந்த திட்டம் பெரும்பாலும் உதவக்கூடியது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குதான்.
டாஸ்மாக் - கடைகளை மூட உத்தரவிட்ட ஹைகோர்ட் ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
பல மாநிலங்கள்
உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கட்டிடவேலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு தொழிலாளர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் குடும்ப அட்டையை மாநிலத்துக்கு மாநிலம் மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே தங்களிடமுள்ள, ரேசன் கார்டுகளை வைத்து அவர்கள் இருக்கக்கூடிய மாநிலத்தில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
பழைய அறிவிப்பு
இது புது அறிவிப்பு கிடையாது. கடந்த வருடம் ஜூன் மாதம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லக்கூடிய அவல நிலை இருப்பதால், அதை தடுப்பதற்காக இந்த திட்டம் மறுபடியும் அடிக்கோடிட்டு சொல்லப்பட்டுள்ளது.
பல மாநிலங்கள்
இதுவரை, 18 மாநிலங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, குஜராத் ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் திட்டத்தில் இணைந்துள்ளனர். இதன்பிறகு ஏப்ரலில் தமிழகம் இணைந்தது. மே மாதம், பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் மற்றும் டையூ டாமன் ஆகிய பகுதிகளும் திட்டத்தில் இணைந்தன.
நிபந்தனை
ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போன ஆண்டு ஒரு நிபந்தனை விதித்தது. புதிதாக வடிவமைக்கப்படும் ரேஷன் கார்டுகளில் புதுவகை நடைமுறையை கையாள கேட்டுக்கொண்டது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த உத்தரவை வாபஸ் பெற்று மத்திய அரசு பழைய ரேஷன் கார்டுகளே இந்த திட்டத்துக்கும் பொருந்தும் என்று அறிவித்தது.
10 இலக்க எண்கள்
வெளியாகி உள்ள தகவலின் அடிப்படையில் பார்த்தால், ஒவ்வொரு ரேஷன் கார்டு அட்டையிலும் 10 இலக்க எண்கள் இடம் பெறவேண்டும். முதல் இரண்டு இலக்கம் அந்தந்த மாநிலங்களை, குறிப்பிடும் வகையில் இருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, தற்போது நடைமுறையிலுள்ள ரேஷன் கார்டு நம்பர் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தனித்துவமான ரேஷன் கார்டு ஐடி உருவாக்கப்படும்.
ரேஷன்-ஆதார்
ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருப்பதால், ஒரே கார்டை பயன்படுத்தி, ஒரே மாதத்தில் வெவ்வேறு இடங்களில் பொருட்கள் வாங்குவது தவிர்க்கப்படும். அதேநேரம், பொதுவினியோக கட்டமைப்பு மிக சிறப்பாக இருக்கக்கூடிய தமிழகம் போன்ற மாநிலங்கள், இந்த திட்டத்திற்கு எதிராக முணுமுணுப்பு உள்ளது. தங்களது கட்டமைப்பை வேறு மாநில தொழிலாளர்கள் பயன்படுத்தி, உள்ளூர் மக்களுக்கு போதிய உணவு தானியம் கிடைக்காமல் சென்று விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இந்த மாநிலங்களில் இருந்தது. ஆனால், பிற மாநிலங்களில் அப்படியான பிரச்சினை இல்லை என்பதால் தற்போது அது ஏற்கப்பட்டுள்ளது.