திடீரென்று ஜியோவின் பங்குகளை வாங்கிய பேஸ்புக்.. என்ன காரணம்? மார்க் ஜுக்கர்பெர்க் செம விளக்கம்!
டெல்லி: ஜியோவின் பங்குகளை திடீர் என்று பேஸ்புக் வாங்கியதற்கு என்ன காரணம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கி உள்ளார்.
Recommended Video
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு துறை நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோவில் பேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. 43,574 கோடி ரூபாயையே முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் முதலீடு செய்துள்ளது.
இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் டெலிகாம் கீழ் வரும் ஜியோ நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளைப் பேஸ்புக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு உள்ளது. இன்று அதிகாலை இதற்கான அறிவிப்பு வெளியானது.
பேஸ்புக் முதலீடு
இதற்கான காரணங்களை தற்போது பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கி உள்ளார். அதில், உலகில் தற்போது பல விஷயம் நடக்கிறது. ஆனால் நான் இப்போது இந்தியா குறித்து ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். ஜியோவின் பல்வேறு தளங்கள் உடன் பேஸ்புக் இணைந்து செயல்பட உள்ளது. நாங்கள் ஜியோவில் முதலீடு செய்ய இருக்கிறோம். நாங்கள் இருவரும் பெரிய திட்டங்களை இணைந்து செயல்படுத்த இருக்கிறோம். இந்தியாவில் இதன் மூலம் புதிய வியாபாரத்திற்கான வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்கும்.
என்ன காரணம்
இந்தியா என்பது திறமையான தொழில்முனைவோர்கள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் என அனைத்துக்கும் பெரிய தளமாக இருக்கிறது. இந்தியாவில் மக்கள் இடையே இணையம் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தை கொண்டு சென்றதில் ஜியோ முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் அவர்களிடம் நாங்கள் முதலீடு செய்கிறோம். இது மிகவும் முக்கியமான விஷயம்.
முழு விளக்கம்
இப்போது இந்தியாவில் இருக்கும் சிறு சிறு நிறுவனங்கள் அமைப்புகள் ஆகியோர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. இந்தியாவில் 60 மில்லியன் மக்கள் இது போன்ற சிறு சிறு தொழில்களை நம்பி இருக்கிறார்கள். லாக் டவுன் காரணமாக பலரும் டிஜிட்டல் தளம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள். தங்கள் தொழிலை டிஜிட்டல் மயமாக மாற்றி வருகிறார்கள். இதை நாங்கள் உதவி செய்து ஊக்குவிக்கலாம் என்று இருக்கிறோம்.
டிஜிட்டல் தளம்
இதனால்தான் நாங்கள் ஜியோவுடன் இணைய இருக்கிறோம். இந்தியாவில் இதன் மூலம் புதிய வர்த்தக, வியாபார வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்க பேஸ்புக் பிளான் செய்துள்ளது என்று குறிப்பிடுகிறார்கள். மொத்தம் 3 விதமான விஷயங்களை பேஸ்புக் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தகம்
அதன்படி முதலில் கூகுளின் ஜி பே மற்றும் பேடிஎம் போல ஆன்லைன் பேமென்ட் தளம் ஒன்றை பேஸ்புக் ஜியோவுடன் இணைந்து உருவாக்கும் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி ஜியோவின் ஜியோ மார்ட் தளத்துடன் இணைந்து நாடு முழுக்க அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் மூலம் விற்க முடிவு செய்துள்ளது என்கிறார்கள். மேலும் அமேசானுக்கு போட்டியாக ஜியோவின் அஜியோவில் புதிய திட்டங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
உணவு டெலிவரி முழுக்க
இதன் மூலம் உணவு டெலிவரியில் கூட பேஸ்புக் களமிறங்கும் என்கிறார்கள். வாட்ஸ் ஆப் மூலம் இதை எல்லாம் செய்ய பேஸ்புக் முடிவு செய்துள்ளது. நாடு முழுக்க ஆன்லைன் விற்பனையை அதிகரிக்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது. நாடு முழுக்க இப்போதே ஆன்லைன் வர்த்தகம் லாக் டவுன் காரணமாக தீவிரம் அடைந்து வருகிறது. பேஸ்புக் - ஜியோ கூட்டணி அதை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.