எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்
டெல்லி: தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறை நலிவடைவதாக தருமபுரி எம்.பி. செந்தில்குமார் வேதனை தெரிவித்தார்.
லோக்சபா விவாதத்தில் பங்கேற்ற தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில் குமார் பேசுகையில், "இப்போது SEZ அவசர சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அவசரம் என்ன? முந்தைய சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு சொந்தமான அறக்கட்டளைகளில் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது.
அரசுக்கு நெருக்கமான மற்றும் சொந்த நலன்களை காப்பாற்றும் வகையிலான சிலருக்கு ஆதரவாக, இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக என்ற சந்தேகங்கள் உள்ளன" என்றார்.
செஸ் எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிகளில், அரசு சலுகையுடன், அறக்கட்டளைகளை அமைத்துக்கொள்ள வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைப்பற்றிதான் செந்தில்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
செந்தில் குமார் மேலும் பேசுகையில், "ஒரு காலத்தில் ஆட்டோமொபைல் மையமாக இருந்தது தமிழகம். இப்போது ஆட்டோமொபைல் தொழில்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. தற்போதைய மாநில அரசின் கீழ், தமிழகத்தில் தொழில் துவங்குவது என்பது கஷ்டமாக மாற்றப்பட்டுள்ளது" என்றார்.
செஸ் சட்டத் திருத்தத்தின் படி, சிறப்பு பொருளாதார மண்டலத்தில், அறக்கட்டளைகளின், முதலீடுகளை எளிதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 'நபர்' என்ற வரையறையில் 'அறக்கட்டளைகளை' சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலம் (திருத்தம்) மசோதா 2019 ஐ அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. முந்தைய மோடி அரசால் மார்ச் மாதத்தில் இதுதொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் புதிய அரசு பதவிக்கு வந்துள்ளதால், அந்த அவசர சட்டம் காலாவதியாகிவிட்டது.