"ஒத்துக்கிறேன்.. போட்டியெல்லாம் தேவையில்லை தான்..!" திடீரென யூடர்ன் போடும் சசி தரூர்? என்ன ஆச்சு
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளை சசி தரூர் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சி சில ஆண்டுகளாக இக்கட்டான சூழலில் உள்ளது. சில ஆண்டுகளில் எதிர்கொண்ட எந்தவொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் வெற்றியைப் பதிவு செய்யவில்லை.
அதைத் தாண்டி ஆட்சி அமைக்கும் மாநிலங்களிலும் கூட ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை. மேலும், கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் வரிசையாக வெளியேறி வருகின்றனர்.
பயமா? எனக்கா.. பின்வாங்கவே மாட்டேன்! காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து சசிதரூர் அளித்த பரபர பதில்
காங்கிரஸ்
இதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதும் அவர்கள் கோரிக்கை. ஏனென்றால் 2019 மக்களவை தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகினார். உடல்நிலையைக் காரணம் காட்டி சோனியா காந்தி காங்கிரசின் தலைவர் பொறுப்பை ஏற்க மறுக்கிறார். இருப்பினும், மூத்த நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் அவர் இடைக்கால தலைவராகத் தொடர்கிறார்.
நடுநிலை
இந்தச் சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்ய அக்.17ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்றும் அவர்கள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலையாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவர் பொறுப்பிற்கு வரும் சூழல் உருவாகி உள்ளது.
போட்டி
இதில் முதலில் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவரான அசோக் கெலாட் போட்டியிடுவார் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், ராஜஸ்தான் முதல்வர் பதவியில் அவர் தொடர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல் செய்தார். அதேநேரம் மறுபுறம் தேர்தலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சசி தரூர் சத்தமின்றி வேட்புமனு தாக்கல் செய்தார்.
மல்லிகார்ஜுன கார்கே
இதன் மூலம் இருவருக்கும் இடையே நேரடி போட்டி உருவாகி உள்ளது. இந்தச் சூழலில் மல்லிகார்ஜுன கார்கே நேற்று சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது, "சசி தரூரிடம் நான் பேசினேன். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஒருவர் மட்டும் போட்டியின்றி ஒருமித்த ஆதரவுடன் தேர்வானால் நன்றாக இருக்கும் என்றேன். ஆனால், அவர் ஜனநாயகத்தில் போட்டி இருக்க வேண்டும் என்றதால், அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
ஒப்புக்கொள்கிறேன்
மல்லிகார்ஜுன கார்கே போட்டி தேவையில்லை என்று கூறியது பேசுபொருள் ஆனது. இந்நிலையில், சசி தரூர் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், "நான் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கட்சியில் எங்களுக்குள் போட்டிப் போட்டுக்கொள்வதை விட பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரது எண்ணம். எனவே கார்கே சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்.
வித்தியாசம் இல்லை
கருத்தியல் ரீதியாக எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் தேர்தல் என்பது மிகவும் திறம்படக் கட்சியைச் செயல்பட வைப்பது யாராக இருக்கும் என்பதைப் பொருத்து மட்டுமே இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் என்பது வெறும் சடங்காக இல்லாமல் பல வேட்பாளர்களுடன் ஜனநாயக முறையில் நடக்க வேண்டும் என்பதை முதலில் வலியுறுத்தியவர்களில் சசி தரூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.