3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்!
டெல்லி: பாஜகவின் தலைவர் பதவியை ஜே.பி நட்டாவிற்கு கொடுத்திருக்கும் அமித் ஷா, மூன்று முக்கியமான விஷயங்களில் இனி கவனம் செலுத்துவார் என்று கூறுகிறார்கள்.
பாஜகவின் மிகவும் வலிமையான தலைவர், வலிமையான சக்தி என்று கருதப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தலைவர் பதவியில் இருந்து மொத்தமாக விலகி உள்ளார். பாஜகவின் தேசிய செயல் தலைவராக இருந்த ஜே.பி நட்டா இன்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நட்டா போட்டியின்றி தலைவராக தேர்வானார். அமித் ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவர் நட்டா என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் பதவியில் இருந்தபோது.. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியலையே.. அமித் ஷாவுக்கு ஏமாற்றம்தான்!
தலைவர் பொறுப்பு
பாஜகவின் தலைவர் பொறுப்பை அமித் ஷா துறந்ததற்கு பின் ஆர்எஸ்எஸ் கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம் அமித் ஷா வேறு சில விஷயங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தனது பதவியை ஜே.பி நட்டாவிடம் அளித்துள்ளார். உள்துறை அமைச்சராக அமித் ஷா முக்கியமான மூன்று விஷயங்களை செயல்படுத்த போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கம்
கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் மக்கள் முன் பேசிய அமித் ஷா, நான் இங்கே அடிக்கடி வருவேன். இனி நீங்கள் என்னை வாரம் ஒருமுறை பார்த்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை, என்று குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் அமித் ஷா, சிஏஏ சட்டம் குறித்து பேசினார். ஆம் சிஏஏ குறித்து அமித் ஷா நாடு முழுக்க பேச இருக்கிறார்.
அமித் ஷா எப்படி
இதற்காக அமித் ஷா பாஜகவில் முக்கிய அணி ஒன்றை உருவாக்க உள்ளார். ஸ்மிரிதி இராணி, பியூஸ் கோயல் உள்ளிட்ட முக்கியமான நபர்கள் இந்த குழுவில் இடம்பெற இருக்கிறார்கள். இந்த குழு மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரை நாடு முழுக்க சென்று சிஏஏ குறித்து பிரச்சாரம் செய்ய உள்ளனர். இடையிடையே என்ஆர்சி குறித்தும் இவர்கள் பேசுவார்கள் என்பது குறிப்பிடதக்கது. இதைத்தான் தற்போது அமித் ஷா முதல் பணியாக செய்ய இருக்கிறார்.
காஷ்மீர் பிரச்சனை
காஷ்மீர் பிரச்சனை, அயோத்தி வழக்கை ஒருவகையில் பாஜக சிக்கல் இன்றி கடந்து வந்துவிட்டது. ஆனால் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் பாஜகவை பெரிய அளவில் சீண்டி இருக்கிறது. இதனால் எப்படியாவது சிஏஏவை, போராட்டங்களை மீறி செயல்படுத்த அமித் ஷா உறுதியாக இருக்கிறார். இதனால் இந்த வருடம் முழுக்க அமித் ஷா இந்தியா முழுக்க இது தொடர்பாக சென்று பேச உள்ளார்.
பொது சிவில் சட்டம்
அதற்கு அடுத்தபடியாக பொது சிவில் சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டங்களை அமித் ஷா நிறைவேற்றுவார் என்றும் கூறுகிறார்கள். இதற்கான பணிகளை அவர் வெறும் உள்துறை அமைச்சராக செய்வார் என்று கூறுகிறார்கள். அயோத்தி, காஷ்மீர் பிரச்சனை, பொது சிவில் சட்டம் மூன்றையும் அமித் ஷா கவனிப்பார் என்கிறார்கள்.
தென் மாநிலம் எப்படி
கடைசியாக தென் மாநிலங்களில் இனி அமித் ஷாவை அதிகம் பார்க்கலாம். தென் மாநிலங்களில் பாஜகவை பலப்படுத்த அமித் ஷா நேரடியாக களமிறங்க போகிறார். தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழகத்தில் பாஜகவை அமித் ஷா நேரடியாக கட்டுப்படுத்த போகிறார் என்று தேசிய அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.