கொஞ்சம் விசாரணை.. சில விளக்கங்கள்.. இந்தியா திரும்பிய அபிநந்தன் சந்திக்க போவது இதுதான்!
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியா திரும்பிய பின் சில முக்கிய அடிப்படை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியா திரும்பியதை அடுத்து அவர் சில முக்கிய அடிப்படை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட இருக்கிறார். விதிகளின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்பட உள்ளார்.
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு பின் வாகா எல்லையில் இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வந்தபின் அபிநந்தன் என்ன செய்வார் என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அரசு தரப்பில் இருந்து சில அதிகாரிகள் விளக்கமும் அளித்துள்ளனர்.
பாக்., பிடியில் சிக்கிய அபிநந்தனுக்கு என்ன நடந்திருக்கும்... விமானி நச்சிகேதா பதில்
என்ன நடக்கும்
இன்று மாலை அபிநந்தன் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவருடன் அவர் கொண்டு வந்த பொருட்களும் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஒரு கண்ணாடி, ஒரு கை துப்பாக்கி, ஒரு இந்திய வரைபடம், ஒரு டைரி ஆகியவை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின் அவர் விமானப்படை தலைமையகம் கொண்டு வரப்படுவார்.
சாதாரண விசாரணை
அதன்பின் அவர் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தானில் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்குவார். இது வீடியோ பதிவாக எடுத்துக் கொள்ளப்படும். பாகிஸ்தானில் விழுந்ததில் இருந்து, கடைசியாக இந்திய எல்லையை கடந்தது வரை என்ன நடந்தது என்பதை அவர் தன் உயர் அதிகாரிகளிடம் விளக்கம் அளிப்பார்.
ராணுவ ரகசியம்
அதேபோல் ராணுவ ரகசியங்கள் குறித்த தனிப்பட்ட விசாரணை நடக்கும். இவருக்கு விமான தலைமையகத்தில் மருத்துவ விசாரணையும் நடக்கும். இந்த விசாரணைகள் எவ்வளவு நல்ல வீரராக இருந்தாலும், உயர் அதிகாரியாக இருந்தாலும், இது போன்ற நேரங்களில் கண்டிப்பாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்தான் அபிநந்தன் விசாரணைக்கு உட்படுவார். இன்று இரவு வரை இந்த விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.
குடும்பத்தார்
அதன்பின் இவர் தனது குடும்பத்தாரை சந்திக்க அனுமதிக்கப்படுவார். அபினந்தனை வரவேற்க அவரது தந்தை வர்த்தமான், தாயார் ஷோபனா ஆகியோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டனர். டெல்லி வரும் அபிநந்தனை அவரது பெற்றோர்கள் வரவேற்க தயாராகி இருக்கிறார்கள். இந்த விதிகள் முடிந்த பின் அபிநந்தன் தனது குடும்பத்தாரை சந்திப்பார்.