தேசிய குடிமக்கள் பட்டியலில் விடுபட்டவர்களின் நிலை என்ன?.. கவலையில் 19 லட்சம் மக்கள்!
டெல்லி: தேசிய குடிமக்கள் பட்டியலில் விடுபட்ட 19 லட்சம் பேரின் நிலை என்னவாகும் என்ற கவலையில் அந்த மக்கள் உள்ளனர்.
பொதுவாக ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு செல்வது, ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்துக்கு செல்வது என்பது வழக்கமான ஒன்றாகும். இவர்கள் வேலை செய்வதற்காகவும் கல்விக்காகவும் இது போல் செய்வதுண்டு.
இதிலும் முறையாக அனுமதி பெற்று செல்வோரும் உண்டு. அத்துமீறி செல்பவர்களும் உண்டு. இது போல் செல்பவர்கள் நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருந்தால் அவர்கள் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதற்கான அத்தாட்சியாக ஏதேனும் சான்றிதழை வாங்குவது கட்டாயமாகும்.
குடியுரிமை
இல்லாவிட்டால் அவர்கள் எந்த நேரத்திலும் குடியுரிமையை இழக்க நேரிடும். இந்த வங்கதேசத்திலிருந்து இந்தியாவின் அசாம் மாநிலத்துக்கு ஏராளமானோர் அனுமதியின்றி குடியிருப்பதாகவும் அவர்கள் அரசின் சலுகைகளை பெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
குடிமக்கள் பட்டியல்
இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு அசாமில் ஆதார் கார்டு அடிப்படையில் வங்கதேசத்திலிருந்து வந்து குடியேறியதாக 40 லட்சம் பேர் விடுபட்டனர். பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாழ்வாதாரம்
அதில் 19 லட்சம் பேர் இந்தியர்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களின் நிலை என்னவாகும் என தெரியவில்லை. இவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது.
அடுத்து என்ன?
என்.ஆர்.சி-யில் ஒரு நபரின் பெயர் இல்லாவிட்டால் அவர் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்படுவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தாங்கள் இந்தியர்கள்தான் என்பதை நிரூபிக்க வாய்ப்பு இருந்தால் அதை நிரூபிக்கலாம். இதற்காக வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தில் அவர்கள் புகார் அளிக்கலாம். தீர்ப்பாயத்தால், அவர்கள் வெளிநாட்டினர் என்று அறிவிக்கும் வரை எந்த சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார்கள். குடியுரிமைக்கான அட்டவணையின் பிரிவு 8 (குடிமக்களை பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல்) விதிகள், 2003 கீழ், மேல்முறையீடு செய்யலாம்.