3 மண்டலமாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டம்.. பிரதமர் பேச்சில் தகவல் இல்லை
டெல்லி: இந்தியாவை 3 மண்டலங்களாகப் பிரித்து அதற்கு நோயின் தீவிரத்தின் அடிப்படையில் சிகப்பு, மஞ்சள், பச்சை என வண்ணங்களின் கீழ் கொண்டு வரலாம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது உரையில் அதுகுறித்த எந்தவொரு தகவலும் இல்லை.
Recommended Video
இன்றுடன் பிரதமர் அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல மாநில முதல்வர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனிடையே பஞ்சாப், கர்நாடகம், மேற்கு வங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையும், மே 1-ஆம் தேதி வரையும் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.
3 மண்டலங்கள்
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுவதாக நேற்று பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு கூறியுள்ளது. லாக்டவுனை நாடு முழுவதும் நீட்டிக்க உத்தரவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லாவிட்டால் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த கொரோனா நோய் தாக்கத்தின் அடிப்படையில் இந்தியா 3 மண்டலங்களாக பிரிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது.
பாதிப்பு
அதாவது கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது, மேற்கண்ட யோசனையை அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிகப்பு மண்டலங்களாகவும், பாதிப்பு எண்ணிக்கை ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை மஞ்சள் மண்டலங்களாகவும், கொரோனா பாதிப்பே இல்லாத பகுதிகளை பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்க வேண்டும்.
பகுதிகள்
அவ்வாறு சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும் பகுதிகளில் லாக்டவுன் தொடர வேண்டும். மஞ்சள் மண்டலமாக வகைப்படுத்தும் பகுதிகளில் பொருளாதாரத்தை உயர்த்தும் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிப்பது, அதே சமயம் மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது. அது போல் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்படும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும்.
கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மோடி நாட்டு மக்கள் முன் உரையாற்றினார். அப்போது அவர் ஏற்கெனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து, அதாவது மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். ஏற்கெனவே உத்தேசித்தப்படி இந்தியாவை 3 மண்டலங்களாக பிரிக்கும் திட்டம் குறித்து மோடியின் உரையில் எந்த தகவலும் இல்லை.
மருந்து
கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலக்கட்டத்திற்கான விதிகள் நாளை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது போல் முகக் கவசத்தின் அவசியம் குறித்து தனிமனித இடைவெளி குறித்தும் தெரிவித்துள்ளார். கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.