3 மணி நேர பரபரப்பு.. இந்தியா உட்பட பல நாடுகளில் திடீரென செயலிழந்த வாட்ஸ் ஆப்.. என்ன நடந்தது?
டெல்லி: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் செயலி இயங்கவில்லை. திடீரென்று வாட்ஸ் ஆப் செயல்படாமல் போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல மெசேஜிங் சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது திடீரென செயல் இழப்பது வழக்கம். அதிலும் பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் ஆப்பை வாங்கியதில் இருந்து அடிக்கடி அந்த செயலி செயல் இழப்பது வழக்கமாக நடந்து வருகிறது.
கடந்த வருடம் அடிக்கடி இந்த செயலி செயல் இழந்தது. இந்த நிலையில் இந்த வருடம் மூன்றாவது முறையாக நேற்று இரவில் இருந்து இந்தியாவில் பல இடங்களில் இந்த வாட்ஸ் ஆப் செயலி இயங்கவில்லை.
மக்கள் புகார்
எங்களுக்கு வாட்ஸ் ஆப் இயங்கவில்லை, மெசேஜ் செய்ய முடியவில்லை என்று பலர் புகார் அளித்தனர். சரியாக நேற்று இரவு 11.30 மணிக்கு பலருக்கு வாட்ஸ் ஆப் இயங்காமல் போய் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 72% பேர் இந்த பிரச்னையை எதிர்கொண்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்கவும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
என்ன சிக்கல்
சரியாக மெசேஜ் அனுப்ப முடியவில்லை. லாஸ்ட் சீன் தவறாக காட்டுகிறது. மெசேஜ் வரவில்லை. பலருக்கு வாட்ஸ் ஆப் டிபி காட்டவில்லை என்று நிறைய புகார்கள் எழுந்துள்ளது. இன்னும் சிலருக்கு வாட்ஸ் ஆப்பை திறக்கவே முடியவில்லை என்றும் கூறுகிறார்கள். உலகம் முழுக்க 1.5 பில்லியன் மக்கள் இந்த செயலியை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.
காரணம் என்ன
ஆனால் இந்த செயலி இப்படி திடீரென செயல்படாமல் போனது என்ன காரணம் என்று தெரியவில்லை. வாட்ஸ் ஆப் நிறுவனம் இது தொடர்பாக காரணத்தை தெரிவிக்கவில்லை. அந்த நிறுவனம் இது தொடர்பாக விசாரித்து வருகிறது. எதாவது தொழில்நுட்ப காரணம் இதற்கு பின் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
வேறு எங்கு
இந்தியா தவிர்த்து இலங்கை, பெரு, லண்டன், அமெரிக்கா, பிரேசில் , நெதர்லாந்து, ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகளிலும் வாட்ஸ் ஆப் செயல் இழந்தது. கொலம்பியா, கஜகஸ்தான், ஸ்வீடன், ரோமானியா, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் கூட இந்த வாட்ஸ் ஆப் செயலி செயல் இழந்து இருக்கிறது.அதன்பின் இரண்டு - மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் வாட்ஸ் ஆப் செயலி சரியாக செயல்பட தொடங்கியது.