வாட்ஸ்அப் ஹேக்கிங்.. மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
டெல்லி: வாட்ஸ்அப், ஹேக் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தியாவிலுள்ள மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட உலகம் முழுக்க, பல்வேறு முக்கியஸ்தர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த நிறுவனம் இதில் ஈடுபட்டதாகவும், எனவே அந்த நிறுவனத்துக்கு எதிராக வாட்ஸ்அப் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவர், பிரியங்கா காந்தி மத்திய அரசையும் இதில் குற்றம் சாட்டி ட்வீட் ஒன்றை, இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் தொலைபேசியை உளவு பார்க்க இஸ்ரேல் நிறுவனத்துடன் மத்திய பாஜக அரசு இணைந்து செயல்பட்டால், அது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரானது. இந்த விஷயத்தில் அரசின் பதிலை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
If the BJP or the government has engaged Israeli agencies to snoop into the phones of journalists, lawyers, activists and politicians, it is a gross violation of human rights and a scandal with grave ramifications on national security. Waiting for the government’s response.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 1, 2019
முன்னதாக நேற்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்ட ட்வீட்டில், இந்திய குடிமக்களின் தனிப்பட்ட உரிமையை மீறி, வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்டு உள்ளதாக வந்துள்ள, தகவலை மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறியிருந்தார்.