தனது கதையை அந்தப் பெண் சொல்லச் சொல்ல.. கண்ணீர் விட்டு அழுத பில் கேட்ஸ் #WorldAIDSDay
டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் அழுத கதை தெரியுமா உங்களுக்கு.. இந்தியாவில் தான் அது நடந்துள்ளது.
பில்கேட்ஸின் கேட்ஸ் பவுண்டேஷன் சார்பாக இந்தியாவில் நடத்தப்பட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பலமுறை இந்தியா வந்துள்ளார் கேட்ஸ். அப்போது ஒரு சமயத்தில் ஒரு பெண்ணின் கதையைக் கேட்டு கண்ணீர் விட்டுள்ளார் கேட்ஸ்.
அப்பெண் ஒரு பாலியல் தொழிலாளி. தனது உடலை விற்று தனது மகளைப் படிக்க வைத்தார். அதன் பிறகு நடந்ததுதான் கொடுமை.. இதுதான் கேட்ஸை உலுக்கி விட்டது.
கேட்ஸ் குறித்த புத்தகம்
கேட்ஸ் பவுண்டேஷனின் எச்ஐவி-எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தின் தலைவராக 10 வருடம் பணியாற்றியவர் அசோக் அலெக்சாண்டர். இவர் "A Stranger Truth: Lessons in Love, leadership and Courage from India's Sex Workers" என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் கேட்ஸ் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவில் பாலியல் தொழிலாளர்களின் அவலம் குறித்து பில் கேட்ஸ் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார் என அசோக் கூறியுள்ளார்.
கேட்ஸ் தம்பதிக்கு அதிர்ச்சி
ஒரு சமயம், கேட்ஸும், அவரது மனைவி மெலின்டாவும் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அப்போது பாலியல் தொழிலாளர்களின் நிலை, அவலங்களைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
மோசமான அனுபவம்
பாலியல் தொழிலாளர்களுடன் அமர்ந்து கேட்ஸும், மெலின்டாவும் பேசினர். அப்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களது, சோகம், அவலம், வறுமை, அவமானம் உள்ளிட்டவற்றை விளக்கிப் பேசியபோது மிகுந்த வேதனையுடன் அதைக் கேட்டனர் கேட்ஸ் தம்பதியினர்.
கேட்ஸை உலுக்கிய பெண்ணின் கதை
2000வது ஆண்டு இதேபோல இன்னொரு சமயம் கேட்ஸ் இந்தியா வந்திருந்தார். அப்போது ஒரு பெண் அவரிடம் பேசியபோது தனது சோகத்தை வெளிப்படுத்தினார். அப்பெண் கூறுகையில், நான் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். அதை ரகசியமாக வைத்திருந்தேன். எனது மகளுக்கு தெரியாது. அவள் பள்ளியில் படித்து வந்தாள்.
மகளின் மரணம்
ஆனால் அவளது பள்ளித் தோழிகளுக்கு என்னைப் பற்றிய உண்மை தெரிந்து விட்டது. அவர்கள், எனது மகளை கிண்டலடித்தனர், மோசமாகப் பேசினர். இதனால் எனது மகள் அதிர்ச்சி அடைந்தாள். நான் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியபோது எனது மகள் தூக்கில் தொங்கியிருந்தாள் என்று கூறி அழுதார் அப்பெண். அதைக் கேட்டுக் கொண்டிருந்த பில் கேட்ஸ், தலையைக் குனிந்தபடி மெளனமாக அழுது கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார் அசோக்.
இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.