முடிவை சொன்ன போது அத்வானி அழுதார்.. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு போவதை தடுக்கவில்லை.. சத்ருகன் சின்ஹா
டெல்லி: வாஜ்பாய் தலைமையின் போது பாரதிய ஜனதாவில் சேர்ந்த சத்ருகன் சின்ஹா சமீபத்தில் தான் காங்கிரஸில் இணைந்தார். தாம் பாரதிய ஜனதாவில் சேர்ந்த போது ஜனநாயகம் இருந்தது, தற்போது இருப்பதோ சர்வாதிகாரம் ஒன்று தான் என சாடியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சத்ருகன் சின்ஹா, தற்போதுமோடி, அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதாவில் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர முடிந்ததாக குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதன் மூலம் தாம் தற்போது சரியான மற்றும் சிறந்த திசையில் பயணிப்பது போல உணர்வதாக குறிப்பிட்டார். பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை. அவர்களின் அனுபவத்தை உணர்ந்து முறையாக நடத்துவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரான அத்வானியின் ஆசிர்வாதம் தமக்கு எப்போதும் இருக்கும் என குறிப்பிட்ட சத்ருகன், தாம் காங்கிரஸில் இணைய போவதாக அவரிடம் தெரிவித்த போது, கண்ணீர் மல்க சரி என்று தான் சொன்னாரே தவிர போகாதே என்று என்னை தடுக்கவில்லை.
அவரது கண்ணீரின் அர்த்தம் வேறு என்னவாக இருக்க முடியும். மூத்த தலைவரான தமக்கே இந்த நிலை தான் எனவே சத்ருகன் காங்கிரஸ் கட்சிக்கு போவது சரியான முடிவு தான் என்றல்லவா நினைத்திருப்பார் என கூறியுள்ளார். இச்சம்பவத்திலிருந்தே பாரதிய ஜனதாவில் மூத்த தலைவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை புாிந்து கொள்ள முடிகிறதா என வினவினார் சத்ருகன்.
மேலும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த சத்ருகன் சின்ஹா, தேசியவாத பிரச்சனையை தூக்கி பிடிப்பதன் மூலம் மோடி மட்டுமே கேள்விகளைக் கேட்கிறார். நாம் வேலைவாய்ப்பு பற்றி கேட்டால், புல்வாமா தாக்குதல் பற்றி பேசுகிறார். மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள நினைக்கும் கேள்விகளுக்கு மோடி எப்போதுமே பதில் கூறுவதில்லை என சாடியுள்ளார்.
பாலகோட் தாக்குதல் நடப்பு மக்களவை தேர்தல் முடிவுகளில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று கேட்டதற்கு, ஒவ்வொரு இந்தியரும் தேசியவாதிதான் என்று சத்ருகன் சின்ஹா கூறினார். மே 23-க்கு பின் மோடி பிரதமர் பதவி வகிக்க மாட்டார் என மம்தா பானர்ஜி சரியாக தான் கூறியுள்ளார். பிரதமரின் காலாவதி காலம் நெருங்கி விட்டது. மோடி மூட்டை கட்டும் காலம் வந்து விட்டதாகவும் சத்ருகன் கூறியுள்ளார்.