உலகம் முழுக்க 23 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டாச்சு.. இந்தியாவில் எப்போ? மோடிக்கு ராகுல் கேள்வி
டெல்லி: உலகம் முழுக்க இதுவரை 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி வழங்கப்பட்டு விட்டது, ஆனால் இந்தியா நிலைமை என்ன ஆயிற்று என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக டுவிட்டர் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
இது பற்றிய ஒரு வரைபடத்தை ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில் உலகம் முழுக்க 22 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த தடுப்பூசி எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் இருக்கிறது அங்கு சுமார் 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. அங்கு ஆறு லட்சம் என்ற அளவுக்கும், பிரிட்டனில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும், ரஷ்யாவில் சுமார் 2 லட்சம் பேருக்கும், தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைபடத்தை பகிர்ந்து உள்ள ராகுல் காந்தி உலகம் முழுக்க 23 லட்சம் பேருக்கு ஆல்ரெடி தடுப்பூசி போட்டுவிட்டனர். சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் தொடங்கிவிட்டனர். இந்தியாவின் நம்பர் என்ன மோடிஜி? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல்காந்தி.
இந்தியாவில் ஜனவரி மாதம்தான் தடுப்பூசி பணிகள் துவங்கும் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.