ஓமிக்ரான் பீதி: இந்தியாவிலிருந்து வெளிநாட்டு விமான சேவை டிசம்பர் 15ல் தொடங்காது என தகவல்
டெல்லி: டிசம்பர் 15ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்தை மத்திய அரசு துவங்காது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
கொரோனா நோய் பரவல் குறைந்த காரணத்தால் டிசம்பர் 15ம் தேதி முதல் சர்வதேச நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து வணிகரீதியான பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
'ஆபத்தான நாடுகளிலிருந்து' இந்தியா வந்த 6 பயணிகளுக்கு கொரோனா.. ஓமிக்ரான் பாதிப்பா? வைரஸ் மரபணு சோதனை
முன்னெச்சரிக்கை
ஆனால் தற்போது ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, உலகின் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கின்றன. இந்தியாவும், சில நாடுகளை ஆபத்தான நாடுகள் பட்டியலில் வைத்துள்ளது. அங்கிருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்தாலும் ஏழு நாட்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். இந்த இடைவெளியில் மூன்று முறை அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
சோதனைகள்
ஒருவேளை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த ரிசல்ட் மரபணு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது எந்த வகை வைரஸ் என்பதை கண்டுபிடிக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
வணிக பயணிகள்
இந்த நிலையில்தான் சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதனுடன் தொடர்புள்ள அனைத்து தரப்புடனும் ஆலோசனை செய்து வணிக ரீதியிலான சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்குவது எப்போது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Recommended Video
போக்குவரத்து
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பல மாதங்கள் பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முடங்கியது. பயணிகள் விமான சேவைக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேருந்து போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது. பயணிகள் ரயில் சேவையும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. ஆனால் விமான போக்குவரத்தை பொறுத்தவரை இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை சீரடைந்தாலும், வெளிநாடுகளுக்கு விமான சேவை சீராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.