இப்போதுதான் ஆரம்பம்.. சீனா போல இந்தியாவில் இனிதான் கொரோனா வேகமாக பரவுமா? நிபுணர்கள் கருத்து
டெல்லி: இந்தியாவில் எப்போது கொரோனா வைரஸ் தாக்கம் தனது கோரமுகத்தை காட்டும் அளவுக்கு மிக வேகமாக பரவும் என்ற அச்சத்துடனான கேள்விப் பல பொது மக்கள் மனதிலும் எழுந்துள்ளது. சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் பெருமளவு மக்களை கொன்று குவித்துள்ளன கொரோனா வைரஸ், இது முதலில் கண்டறியப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு மிக மிக வேகமாக பரவியது. எனவேதான், பொதுமக்கள் அச்சத்துடன் இந்த கேள்வியை கேட்டு வருகிறார்கள்.
Recommended Video
சீனாவைப் பொறுத்தளவில், கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டு இறுதியில் முதல் முறையாக கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் மீது மிக மோசமான தாக்கம் பிப்ரவரி இறுதியில் ஏற்பட்டது.
சீனா, இப்போதுவரை அதன் தாக்கத்தை அனுபவித்து வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உள்ளூரில் எந்த ஒரு வைரஸ் நோய் தொற்றும் ஏற்படவில்லை என்பது சீனாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
பூமியின் பூதாகர எதிரியாக உருவெடுத்த கொரோனா.. கத்தியின்றி ரத்தமின்றி.. ஒரு யுத்தம்!
மூடப்பட்ட வூஹான்
இதற்கு ஏகப்பட்ட முயற்சிகள் தேவைப்பட்டன. வூஹான் மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளை இரண்டு மாதங்களுக்கும் மேலாக முழுக்க மூடியது சீனா. பிற நாடுகள் எவ்வளவோ கெஞ்சியும் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துதான், அங்குள்ள வெளிநாட்டினரை வெளியே அனுப்பியது சீனா. வெளியிலிருந்து யாரும் அந்த நகரங்களுக்குச் செல்ல முடியாது, அங்கிருந்து வெளியே யாரும் போக முடியாது. அந்த அளவுக்கு கடும் நடவடிக்கை எடுத்தது கம்யூனிச சீன அரசு. ரோபோக்களை பயன்படுத்தி உணவு சப்ளை செய்தது. ஆனால் அப்படியும், இத்தனை நாட்கள் கழித்துதான் அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
சீனாவில் அபாயம்
கடந்த ஒரு வாரமாக சீன மக்கள் பழையபடி படிப்படியாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்களிடம், ஒருவரிடமிருந்து ஒருவருக்கு மீண்டும் அந்த வைரஸ் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அவ்வாறு நடக்காமல் இருந்தால் அது மனித குலத்திற்கு மிகப்பெரிய நல்வாய்ப்பாக அமையும்.
இத்தாலியில் 2 வாரங்கள்
இந்தியாவைப் பொறுத்தளவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்டது. இதுவரை 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு முதியவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் முதல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட இரண்டு வாரங்களில் அந்த நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. ஆயிரக்கணக்கானோரை இதுவரை அந்த வைரஸ் கொன்றுள்ளது. ஆனால் நல்ல வேளையாக இத்தாலி அளவுக்கு இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவவில்லை. ஒருவேளை இதற்கு இந்தியாவின் சூடான காலநிலை ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இதுதான் காரணமா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
வீட்டுக்குள்ளேயே இருங்கள்
புயலுக்கு முன்பு அமைதி நிலவுவதை போன்ற ஒரு நிலை இந்தியாவில் இருக்கிறதோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், இந்தியாவுடன் ஒப்பிட்டால் மக்கள் தொகையில் மிக மிக சிறிய நாடுகள். ஆனால், இந்தியாவில் அதுபோன்று கொரோனா தனது கோரமுகத்தை காட்ட ஆரம்பித்தால் இங்குள்ள மக்கள் தொகை பெருக்கத்துக்கு அது வேகமாக பரவி விடும் என்ற அச்சம் இருக்கிறது. இதனால் தான் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று திரும்பத் திரும்ப அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
மக்கள் விழிப்புணர்வு
சில நிபுணர்கள் கருத்துப்படி கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தற்போது 2வது ஸ்டேஜ் என்ற அளவில் இருக்கிறது. இது 3வது ஸ்டேஜ் என்ற அளவுக்கு வரும் போது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதாவது அடுத்தடுத்த வாரங்களில் இந்த நோய் வேகமாக பரவும் வாய்ப்பு இருக்கிறது. சீனா தற்போது நான்காவது ஸ்டேஜ் என்ற நிலையில் இருக்கிறது. ஆனால் அந்த நிலைக்கு போவதற்கு சீனா கொடுத்த விலை மிக அதிகம். அந்த நிலை நமக்கு வந்துவிடக் கூடாது என்றால், இருப்பது ஒரே உபாயம் தான். மக்கள் மிகுந்த சுத்தத்தைப் பேண வேண்டும், மிக மிக அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதைச் செய்தால் மட்டும்தான் ஸ்டேஜ் 3 என்ற கொரோனா வைரசின் கொடூர முகத்தில் இருந்து நாம் தப்ப முடியும். இதுவரை மருந்துகள் கண்டு பிடிக்காத நிலையில், நமக்கு நாமே செய்து கொள்ளும், மக்கள் ஊரடங்கு மட்டுமே இந்த நோயிடமிருந்து நம்மை பாதுகாக்கும் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்.