பிப்ரவரியில் அறிவிப்பு.. மே முதல் வாரத்திற்குள் தமிழக சட்டசபை தேர்தல்?
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் மே முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அடுத்த வாரம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தருகிறார்கள்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டசபையின் பதவிக் காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. கொரோனாவுக்கு மத்தியில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
வரும் ஜூன் மாதத்திற்குள் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுவை ஆகியவற்றின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகளை ஆணையம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
4 மாநிலங்கள்
தமிழகத்தை பொருத்தவரை கடந்த டிசம்பர் இறுதியில் தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அது போல் மற்ற 4 மாநிலங்களுக்கும் ஒவ்வொரு தேர்தல் அதிகாரி சென்று ஆலோசனை நடத்திவுள்ளார்கள்.
தேர்தல் ஆணையர்கள்
இந்த நிலையில் அடுத்த வாரம் டெல்லி தேர்தல் ஆணையர்களும் அதிகாரிகளும் தமிழகம் வருகை தருகிறார்கள். அப்போது தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்கள். இதையடுத்து பிப்ரவரி 20 அல்லது 21 -ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவிப்பது குறித்து டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.
5 மாநிலங்கள்
இதனால் தமிழக சட்டசபை தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 5 மாநிலங்களிலும் மே 5-ஆம் தேதிக்கு பிறகு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனாவால் தேர்வுகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்வுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
ஏப்ரல் 15
அதாவது தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் 15க்கு பிறகு மே 5-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். கடந்த 2016-ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு மே 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை கடந்த முறையை காட்டிலும் முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.
தேர்தல் பிரச்சாரம்
எப்படியும் மே முதல் வாரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என முன்கூட்டியே தெரிந்துதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அது போல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.