பரூக் அப்துல்லா எங்கே? லோக்சபாவில் கொந்தளித்த டி.ஆர்.பாலு.. ஆதரவாக களமிறங்கிய காங்., திரிணாமுல்!
டெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மற்றும் எம்பி பரூக் அப்துல்லா கைதுக்கு லோக்சபாவில் திமுகவின் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து கடுமையாக உரையாற்றினார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக அரசியல் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதேபோல் மற்ற சிறிய தலைவர்களும் வீட்டு சிறையில் இருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம், மாநில அந்தஸ்து இரண்டும் நீக்கப்பட்டதில் இருந்தே அவர்கள் வீட்டு சிறையில்தான் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க கூட அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த காஷ்மீர் பிரச்சனை தற்போது நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் லோக்சபாவில் இது குறித்து குரல் எழுப்பியது. இதில் எதிர்க்கட்சிகள் எல்லாம், காஷ்மீர் முன்னாள் முதல்வரும் காஷ்மீர் தேசிய கான்பிரன்ஸ் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா குறித்து கேட்டனர்.
அவர் லோக்சபாவில் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்வாரா? அவர் விடுதலை செய்யப்படுவாரா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது.
திமுக எம்பி டி.ஆர் பாலு தனது உரையில், ஒரு எம்பியை வீட்டு காவலில் வைத்து இருப்பது தவறு. பரூக் அப்துல்லா எங்கே? அவரை உடனே இங்கு அழைத்து வர வேண்டும். அது விதிமுறைக்கு எதிரானது. நியாயமானதும் கிடையாது.
அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். நாளை நடக்கும் லோக்சபா கூட்டத்தில் பரூக் அப்துல்லா கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும், என்றார். அவரின் பேச்சுக்கு என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து முழக்கம் எழுப்பியது.