ப.சிதம்பரத்தை கூப்பிட்டதே ஒருமுறைதான்.. ஒத்துழைப்பு இல்லை என்று சொல்ல கூடாது.. அபிஷேக் சிங்வி வாதம்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அப்போது சிபிஐ தரப்பில் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த கால அவகாசம் கோரப்பட்டது.
இதன் பிறகு சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார். இதேபோல மற்றொரு மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வியும் வாதிட்டார். அவர் கூறியதாவது: விசாரணை அமைப்பு ஒன்று என்னை ஐந்து முறை விசாரணைக்கு அழைத்தால் ஒருமுறையும் நான் செல்லமாட்டேன் என்று அர்த்தம். ஆனால், சிபிஐ, ஒரு முறை ப.சிதம்பரத்தை விசாரணைக்கு அழைத்தார்கள், அவர் சென்றார். இதில் ஒத்துழையாமை எங்கே இருந்து வந்தது?
சிபிஐ கேட்க விரும்பும் பதிலை அளிக்கவில்லை என்பதாலேயே, ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்று கூறிவிடுவதா? ப. சிதம்பரத்தின் இடைக்கால முன் ஜாமீனை 7 மாதம் கழித்து ரத்து செய்தது ஏன்?
சிபிஐயின் முழு வழக்கு இந்திராணி முகர்ஜி என்பவரின் சாட்சி மற்றும் ஒரு வழக்கு டைரியை அடிப்படையாகக் கொண்டது. இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து 4 மாதம் கழித்தே விசாரணை தொடங்கியது. அதன்பின்பே ப. சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இந்திராணி ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் சிறையில் உள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலம் எப்படி செல்லுபடியாகும்?
சிதம்பரத்திற்கு ஐஎன்எக்ஸ் மீடியா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறினால், அது எங்கே கொடுக்கப்பட்டது, அந்த பணம் எங்கே சென்றது என்பது பற்றி இதுவரை, சிபிஐ குறிப்பிடாதது ஏன்? இவ்வாறு சிங்வி வாதிட்டார்.