முக்கியமான வாய்ப்பை தவற விட்ட ராகுல் காந்தி.. திடீரென களம் வந்த பிரியங்கா.. பின்னணி இதுதான்
டெல்லி: ஒரு முக்கியமான அரசியல் வாய்ப்பை தவறவிட்டு உள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. இதையடுத்து தான் மற்றொரு தலைவர் பிரியங்கா காந்தி நேரடியாக களத்துக்கு வரும் தேவை எழுந்துள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தடியடி நடத்தினர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதிகாக்கும்படி, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.
இந்தியா கேட்
இந்த நிலையில்தான் நேற்று பிற்பகல் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதிக்கு திடீரென எந்த ஒரு முன்னறிவிப்பும் செய்யாமல் வருகை தந்தார் பிரியங்கா காந்தி. அங்கு அவர் சுமார் 2 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஏகே அந்தோணி, அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். பிரியங்கா காந்தியின் இந்த திடீர் வருகை பலருக்கும் புருவத்தை உயர செய்திருக்கிறது.
ராகுல் காந்தி எங்கே
பிரியங்கா காந்தி இவ்வளவு ஆவேசம் காட்டி வீதிக்கு வந்து போராடிய நிலையில் அரசை தொடர்ந்து தீவிரமாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வரும் ராகுல் காந்தி எங்கே என்ற கேள்வி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்டபோது, நாடாளுமன்ற குழுவுடன் அரசு முறை பயணமாக ராகுல்காந்தி தென் கொரியா சென்றுள்ளதாக கூறுகின்றனர்.
தவிர்த்திருக்கலாம்
ஆனால் இப்படி ஒரு மிகப்பெரிய பிரச்சனை கையில் சிக்கிய போது, ராகுல் காந்தி நினைத்திருந்தால் இந்த வெளிநாட்டு பயணத்தை எளிதாக ரத்து செய்துவிட்டு இருக்க முடியுமே என்பதுதான் இப்போது தொண்டர்களுக்கு எழக்கூடிய கேள்வி. மாணவர்கள் தன்னெழுச்சியாகத்தான் போராடுகிறார்கள். ஆனால் பிரதான எதிர்க்கட்சியின் பிரதான தலைவர் என்ற வகையில், அவர்களுக்கு தார்மீக ஆதரவை ராகுல் காந்தியால் கொடுத்திருக்க முடியும். அது நடக்கவில்லை.
பிரியங்கா வருகை
அதேநேரம், ராகுல் காந்தி தனது வெளிநாட்டு பயணத்தை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில்தான் பிரியங்கா காந்தி நேரடியாக களத்துக்கு வரக்கூடிய தேவை எழுந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.