இந்தியாவிலேயே மக்கள் ரொம்ப ஹேப்பியா இருக்கும் மாநிலம் எது? வெளியான சுவாரசிய சர்வே.. தமிழக நிலை என்ன?
டெல்லி: இந்தியாவிலேயே, அதிகம் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தும் மக்கள் எந்த மாநிலத்தில் இருக்கிறார்கள் என்பது பற்றிய தனியார் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் வட கிழக்கு மாநிலமான மிசோரம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழக மக்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள்? மகிழ்ச்சியோடா, கவலையோடா இல்லை இரண்டும் கலந்த மனநிலையிலா?
குருகிராமில் உள்ள மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியரான ராஜேஷ் கே. பில்லனியா ஹேப்பி இன்டெக்ஸ், அதாவது இந்தியாவின் மகிழ்ச்சிக் குறியீடு என்ற பெயரில் ஒரு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆய்வு முடிவுகள் சுவாரசியமாக இருக்கிறது. நாங்க ரொம்ப ஹேப்பியாக இருக்கிறோம் என்று குட்டி மாநிலமான மிசோராம் மக்கள் கூறியுள்ளனர்.
குட்டி மாநிலங்கள் டாப்
தொழில் துறையில் முன்னேறிய, அதிக வேலைவாய்ப்புகளை கொண்ட, பப், பார்களை அதிகம் கொண்ட மாநிலங்களைவிட, இதுபோன்ற ஒரு மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது என்பது, கண்டிப்பாக முக்கியமானது. தொழில் துறை முன்னேற்றங்கள் இல்லாவிட்டாலும், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை மிசோராம் காட்டுகிறது. மிசோராம் மட்டுமில்லை. சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசமும் முதல் 10 இடங்களில் உள்ளன.
6 பிரிவுகள்
இவ்வாண்டு, மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 16,950 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் ஆறு பிரிவுகளின்கீழ் மகிழ்ச்சி அளக்கப்பட்டதாம். வேலை மற்றும் சம்பாதிப்பது போன்ற பணம் தொடர்புடைய விஷயங்கள், குடும்பம் மற்றும் நண்பர்கள் உட்பட உறவுகள், உடல் மற்றும் மன உட்பட ஆரோக்கியம், சமூக அக்கறைகள், மத மற்றும் / அல்லது ஆன்மீக நிலை மற்றும் மகிழ்ச்சியில் கொரோனா விவகாரத்தின் தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள் இதில் கணக்கில் எடுக்கப்பட்டன.
லிஸ்ட் இதோ
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்த்துப் பார்த்தால், மகிழ்ச்சி தரவரிசையில், மிசோரம், பஞ்சாப் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. பெரிய மாநிலங்கள் என்று தனியாக எடுத்துப் பார்த்தால், பஞ்சாப், குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடிக்கின்றன.
புதுச்சேரி
சிறிய மாநிலங்களை மட்டும் பார்த்தால், மிசோரம் தவிர்த்து சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவை குறியீட்டில் மேலே உள்ளன. யூனியன் பிரதேசங்களை மட்டும் பார்த்தால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன.
ஹேப்பியா இருக்க திருமணம் செய்யனும்
திருமண நிலை, வயது நிலை, கல்வி மற்றும் வருமான நிலைகள் ஆகியவை ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சியுடன் தொடர்புடையவை என்று கண்டுபிடித்துள்ளது இந்த ஆய்வு. முக்கியமான விஷயம் என்னவென்றால், திருமணமானவர்கள், திருமணமாகாதவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதையும் முடிவுகள் காட்டுகின்றன.
எதிர்கால நம்பிக்கை
ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் உதவி பேராசிரியரும், அறிஞருமான டாக்டர் ஆஷ்லே வில்லன்ஸ், பணத்தை விட நேரத்தை அதிகம் மதிக்கும் நபர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அடித்துக் கூறியுள்ளார். இந்த ஆய்வில் மக்கள் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்போம் என ஆய்வில் பங்கேற்ற பல மக்களும் கருத்து கூறியுள்ளனர்.
தமிழகம் நிலை
இந்த பட்டியலில் தமிழகம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. தமிழக மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா, கவலையோடு இருக்கிறார்களா இரண்டும் கெட்ட மனநிலையில் இருக்கிறார்களா என்பதுதான் புரியவில்லை. ஆனால், மகிழ்ச்சி பட்டியலில் தமிழகம் டாப்பில் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஏனென்றால், லிஸ்டில் நம்ம மாநிலம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.. "கடல்ல்லயே இல்லையாம்!"