"ஸ்மார்ட் ஒர்க்" OR "ஹார்ட் ஓர்க்" எது முக்கியம்?.. மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு மோடி அளித்த பதில்
புதுடெல்லி: கிரிக்கெட்டில் ரசிகர்கள் போர்கள், சிக்சர்கள் என்று சத்தம் எழுப்புவதை காதில் போட்டுக்கொள்ளாமல் பேட்ஸ்மேன்கள் எப்படி வீசப்படும் பந்தின் மீது தங்கள் கவனத்தை செலுத்தி விளையாடுகிறார்களோ அது போல மாணவர்களும் தங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மாணவர்களுக்கு அட்வைஸ் செய்தார்.
பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 'பரிக்ஷா இ சர்ச்சா' என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். மாணவர்களுக்கு தேர்வு மீதான அச்சத்தை போக்கும் வகையிலும் மன அழுத்தில் இருந்து மாணவர்கள் விடுபட்டு தேர்வு எழுதுவது தொடர்பாக பிரதமர் மோடி அறிவுரைகள் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான பரிக்ஷா இ சார்ச்சா நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
கொல்கத்தாவில் பிரதமர் மோடி குறித்த ஆவணப் படம் வெளியீடு! டெல்லி பல்கலை வெளியே 144 தடை உத்தரவு!
38 லட்சம் மாணவர்கள்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர். இதில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவிகள் ஆவர். இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளித்தார். இந்த உரையாடலின் போது மாணவர் ஒருவர் பிரதமர் மோடியிடம் ஸ்மார்ட் ஒர்க் அல்லது ஹார்ட் ஓர்க் எது முக்கியம் என்று கேள்வி எழுப்பினார்.
புத்திசாலித்தனமான உழைப்பு
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, சிலர் புத்திசாலித்தனமாகக் கடுமையாக பணியாற்றுவார்கள்.. சிலர் கடுமையாகப் புத்திசாலித்தனமாக பணியாற்றுவார்கள் என்று நகைச்சுவையாக பதிலளித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி "இதில் நாம் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நாம் விரும்பும் முடிவை பெற அந்த சூழலுக்கு என்ன தேவையே அதைப் பொறுத்தே வேலை செய்ய வேண்டும்" என்று கூறினார். கடின உழைப்பு அல்லது புத்திசாலித்தனமான உழைப்பு இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்பதை, தாகத்தில் தவிக்கும் காகத்தின் கதையை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு விளக்கினார்.
பந்தின் மீது கவனத்தை செலுத்தி
அதேபோல், கவனம் செலுத்தி படிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கிரிக்கெட்டை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- கிரிக்கெட்டில் ரசிகர்கள் போர்கள், சிக்சர்கள் என்று சத்தம் எழுப்புவதை காதில் போட்டுக்கொள்ளாமல் பேட்ஸ்மேன்கள் எப்படி வீசப்படும் பந்தின் மீது தங்கள் கவனத்தை செலுத்தி விளையாடுகிறார்களோ அது போல மாணவர்களும் தங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
அடிமையாகி விடக்கூடாது
அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடாமல் கவனத்துடன் செயல்பட் வேண்டும். தேர்வுகளில் நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடாது. இப்படி முறைகேட்டில் ஈடுபடுவது தேர்வுக்கு வேண்டுமானால் சிலருக்கு உதவக்கூடும். ஆனால் வாழ்க்கைக்கு பயனளிக்காது. குறுக்கு வழியை ஒருபோதும் நாடக்கூடாது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கடின உழைப்பே மாணவர்களுக்கு எப்போதும் பயனளிக்கும்" என்றார். அதேபோல், மாணவர்கள் கேட்ஜெட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
முயற்சி செய்து பாருங்கள்
பிரதமர் மோடி இது தொடர்பாக கூறுகையில், இப்போது எல்லாம் மாணவர்கள் 6-7 மணி நேரம் செல்போன்களில் நேரத்தை கழிக்கின்றனர். நமது இளைய தலைமுறையினரை இது பாழ்படுத்துகிறது. கேட்ஜட்களின் அடிமையாக நாம் மாறிவருகிறோம். விரதம் ( fasting) கடைபிடிக்கும் கலாசாரம் நம்மிடம் உள்ளது. ஒரு நாள் அல்லது ஒருவாரத்திற்கு டிஜிட்டல் விரதம் இருக்கலாம் என்று நாம் முடிவு எடுக்கலாமா? முயற்சி செய்து பாருங்கள். அது உங்களுக்கு பிடித்து போகும். டிஜிட்டல் பாஸ்டிங்கின் காலத்தை அதிகரிக்க நீங்கள் விரும்புவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஒரே அறையில் அமர்ந்து கொண்டு ஒருவொருக்கொருவர் மெசேஜ் டெக்ஸ்ட் செய்வதை நாம் பார்க்கிறோம். இது ஒரு நோய் போன்றது. அதை உணர்ந்து இத்தகைய போக்கை நீக்கும் நோக்கத்தில் செயல்பட வேண்டும்" என்றார்.