யாருமே குற்றவாளி இல்லை என்றால், பாபர் மசூதியை யார் தான் இடித்தது? ஓவைசி கேள்வி
டெல்லி: பாபர் மசூதியை யார் இடித்தார்கள் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், நிருபர்களை சந்தித்தார் அசாதுதீன் ஓவைசி.
ஓவைசி கூறியதாவது: இன்று ஒரு கருப்பு நாள். பாபர் மசூதி இடிப்பு மிக மோசமான செயல் என்று உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால், இப்போது சிறப்பு நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் அர்த்தம் என்ன?
அத்வானி, உமா பாரதி, உள்ளிட்டோருக்கு நீங்கள் என்ன செய்தியை அனுப்புகிறீர்கள்? வன்முறை செல்லுபடியாகும், பலனளிக்கும் என்று சொல்கிறீர்களா? கல்யாண் சிங் மற்றும் அத்வானி உள்ளிட்டோர், பாபர் மசூதி இடிப்பு, சதிகாரர்கள் என்று சிபிஐ குற்றப்பத்திரிகை கூறுகிறது. ஆனால் அவர்கள் சதிகாரர்கள் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த தீர்ப்பு இந்துத்துவா மற்றும் இந்துத்துவாவை பின்பற்றுபவர்களின் கூட்டு உணர்வை திருப்திப்படுத்துகிறது. யாருமே குற்றவாளிகள் இல்லை என்றால், பாபர் மசூதியை இடித்தது யார்?
ஏற்காடு எஸ்டேட்டில் சத்தமாக கேட்ட இந்தி பாடல்.. கதவை உடைத்து பார்த்தால்.. பயங்கரம்!
இந்த சதித்திட்டத்தின் ஆரம்பம் காங்கிரஸ் கட்சிதான். அவர்கள் ஆட்சியில் இருந்தபோதுதான், மசூதி இடிக்கப்பட்டது. சிலைகள் மசூதிக்குள் வைக்கப்பட்டன. இவ்வாறு அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.
முன்னதாக, ஓவைசி வெளியிட்ட ட்வீட்டர் பதிவில், உருது வாக்கியம் ஒன்றை ஷேர் செய்திருந்தார் ஓவைசி. அதன் அர்த்தம் "கொலைகாரன், அவனே வழக்குத் தொடுப்பவன், அவனே நீதிபதி. ஆகவே, நிறைய தீர்ப்புகள் ஒருதலைப்பட்சமானவை." என்பதுதான்.